சைக்கிளில் பயணம்... பூங்காவில் நடைபயிற்சி: மதுரையில் அசத்தும் ஸ்டாலின்
மதுரை: மதுரையில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் பயணம் செய்தும், வண்டியூர் பூங்காவில் நடைபயிற்சி செய்தவாறும் மக்களிடம் குறைகளை கேட்டார்.
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் 7ம் நாளான இன்று மதுரை புதூரில் பொதுமக்களின் குறைகளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களையும் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். அப்போது பெண்கள் மருத்துவமனைகளை விட அரசு பார்கள் தான் எல்லா இடங்களிலும் அதிகமாக உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் விலைவாசி பன்மடங்கு அதிகரித்து விட்டதாகவும் மதுரையில் மு.க.ஸ்டாலினிடம் பெண்கள் குற்றம் சாட்டினர். மதுரை ஜவஹர்புரத்தில் இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் குறைகளையும் கேட்டறிந்தார்.
மதுரை மாவட்டத்தில் பயணம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பிரச்சார பயணத்தை நேற்று மதுரை புறநகரான அவனியாபுரத்தில் தொடங்கி, மேலூரில் நிறைவு செய்தார். காலை முதல் இரவு வரையிலும் உற்சாகமாக பயணப்பட்ட ஸ்டாலின், ஆடு, மாடு மேய்ப்போர், மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள், நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், வெற்றிலை பயிரிடுவோர், ஜல்லிக்கட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து குறைகளை கேட்டார்.
சைக்கிள் பயணம்
உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் சிலை, பெருங்காமநல்லூர் நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தினார். உசிலம்பட்டியில் சைக்கிளில் பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
இளநீர் குடித்தவாரே
தெருவோர கடைகளில் டீ, வடை, இளநீர் அருந்தினார். பொதுமக்களிடம் ஏராளமான மனுக்களை பெற்றுக் கொண்ட ஸ்டாலின் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 4,41,311 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்களுக்கு ரூ.6,342 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் வங்கி கடன் வழங்கப்படுவதில்லை என்றார். அதிமுக ஆட்சியில் மது விலக்கு சாத்தியமில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு அமலாகும் என்றார்.
ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மாடு வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கடந்த 2009-ம் ஆண்டு ஜல்லிக்கட்டை முறைப்படுத்தும் சட்டத்தை சட்டசபையில் கொண்டு வந்தோம். இதை வலுப்படுத்தும் வகையில் அதிமுக செயல்பட்டிருந்தால் ஜல்லிக்கட்டு நீதிமன்றம் தடை விதித்திருக்க முடியாது. வரும் பொங்கலுக்குள் தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப்படி நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றார்.
தேங்காய் உரிக்கும் தொழிலாளி
மேலக்கால் திருவேடகம் வழியாக சோழவந்தான் சென்றார். அங்கு தோட்டத்தில்அங்கு தேங்காய் உரிக்கும் தொழிலாளி தவமணியிடம் தேங்காய் விளைச்சல், விற்பனை குறித்து கேட்டறிந்தார்.
கலெக்டரிடம் மேயர் மனு
இதனிடையே மதுரையில் இன்று சுற்றுப்பயணம் செய்யும் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மேயர் ராஜன்செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவிடம் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ராஜன் செல்லப்பா, உட்கட்சி மோதலை மறைக்க ஸ்டாலின் வந்துள்ளார். அவரது வருகையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே அனுமதி தரக்கூடாது என புகார் அளிக்கப்பட்டது என்றார்.
தொடர்ந்த பயணம்
மேயரின் புகாரைப் பற்றி கவலைப்படாத ஸ்டாலின் இன்று காலையில் மதுரை வண்டியூர் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டவாரே குறைகேட்டார். தொடர்ந்து புதூரில் பொதுமக்களின் குறைகளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களையும் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
பெண்கள் புகார்
தமிழ்நாட்டில் மருத்துவமனைகளை விட அரசு பார்கள் தான் எல்லா இடங்களிலும் அதிகமாக உள்ளது என்று ஸ்டாலினிடம் புகார் கூறிய பெண்கள், அதிமுக ஆட்சியில் விலைவாசி பன்மடங்கு அதிகரித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர். மதுரை ஜவஹர்புரத்தில் இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் குறைகளையும் கேட்டறிந்தார்.