நந்திவரம் ஏரிக்கரையை குண்டு வைத்து தகர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: கலெக்டரிடம் பாஜக புகார்
காஞ்சிபுரம்: நந்திவரம் ஏரிக்கரையை குண்டு வைத்து தகர்த்தவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
அண்மையில் பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட நந்திவரம் ஏரி நிரம்பியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரிக்கரையில் மூன்று இடங்களில் உடைப்பு எடுத்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. ஏரியில் இருந்து வந்த நீரால் ஊரப்பாக்கம், முடிச்சூர் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் 3 இடங்களில் கரை உடைப்பு எடுக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
அந்த 3 இடங்களில் யாரோ குண்டு வைத்து கரையை உடைத்துள்ளனர் என்று பேச்சு கிளம்பியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் ஏரிக்கரைக்கு நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நந்திரவரம் ஏரிக்கரையை குண்டு வைத்து தகர்த்தவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.