ஓபிஎஸ்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்தது ஆயுதங்களுக்கு அவமானம் - நாஞ்சில் சம்பத்
ஓபிஎஸ்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்ததன் மூலம் ஆயுதங்களுக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டனர் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
தஞ்சை : தமிழகத்தில் செத்த பிணத்தை யாரும் கொல்வதில்லை. ஓபிஎஸ்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆயுதங்களுக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டனர் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் அதிமுக அம்மா அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
இந்தியாவில் லஞ்சம் வாங்க முயன்றால் வழக்கு போடுவதுதான் இதுவரை வழக்கமாக இருந்தது. இப்போது லஞ்சம் கொடுக்க முயன்றால் வழக்கு போடுவது புதிதாக உள்ளது.

மோடி சதி செயல்
மோடியின் சதி செயலுக்கு உடந்தையாக இருப்பவர் ஓபிஎஸ். அதிமுகவை காட்டி கொடுத்ததன் மூலம் எட்டப்பன் வரிசையில் ஓபிஎஸ்க்கு இடம் கிடைத்துள்ளது. மோடியின் ஏற்பாட்டில் அவருக்கு 'ஒய்' பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டலுக்கு பயமில்லை
தமிழகத்தில் செத்த பிணத்தை யாரும் கொல்வதில்லை. ஓபிஎஸ்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆயுதங்களுக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டனர். இங்கு பேச வருவதற்கு முன்பு என்னை பேசக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டலுக்கு பயப்படுபவன் நான் அல்ல.

அதிமுகவை உடைக்க முடியாது
நீட் தேர்வுக்கு மாநிலத்துக்கு ஒரு பாடத்திட்டம் கொண்டு வருகின்றனர். இதை எதிர்க்க துணிவில்லாத ஓபிஎஸ், சசிகலாவை ஒதுக்கி வைக்க கூறுகிறார். அதிமுகவை உடைத்துவிட வேண்டுமென துடிக்கின்றனர், அது நடக்காது. மீண்டும் சசிகலா, தினகரன் வருவார்கள்.

ஜெயலலிதா புகைப்படம்
ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என கடுமையான உடல்நல குறைவால் சிரமப்பட்டாலும் அதுகுறித்து வெளியில் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆனால் அவரை ஏன் புகைப்படம் எடுத்து வெளியிடவில்லையென கேள்வி எழுப்புகின்றனர். இப்போது ஓபிஎஸ், மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார். மைத்ரேயன் புரோக்கராக உள்ளார்.

ஓபிஎஸ் மீது விசாரணைக் கமிஷன்
ஓ.பன்னீர்செல்வம் முறைகேடு செய்த சேர்த்த சொத்து பல ஆயிரம் கோடி. துபாய், சிங்கப்பூர், பக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் கோடி கணக்கில் சொத்து வைத்துள்ளார். எனவே விரைவில் நாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர் மீது விசாரணை கமிஷன் அமைக்கவும், லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications