இன்று முதல் மீண்டும் 'இன்னோவா சம்பத்' என்று அன்போடு அழைக்கப்படுவார்!
சென்னை: சசிகலா தலைமையை ஏற்க எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தனக்கு ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இந்த நிலையில் சசிகலாவை இன்று சந்தித்த நாஞ்சில் சம்பத் அதிமுக கட்சியில் தொடர்ந்து பணியாற்றப்போவதாக கூறியுள்ளார். மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் 2012ம் ஆண்டு இணைந்தார் நாஞ்சில் சம்பத். அப்போது அவருக்கு இன்னோவா காரை பரிசாக கொடுத்தார் ஜெயலலிதா. இதனால் 'இன்னோவா சம்பத்' எனவும் அவர் விமர்சிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுக தலைமையை ஏற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாஞ்சில் சம்பத் திமுகவுக்கு தாவுகிறார் எனக் கூறப்பட்டது.
பழிசுமப்பதாக ஆதங்கம்
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாஞ்சில் தனது பேஸ்புக் பக்கத்தில், கூறுகையில், 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை, வீணாக அதை வைத்து கொண்டு இன்னோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்கு இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமை கழகத்தில் ஒப்படைத்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.
சேனலுக்கு ஒருமாதிரி பேட்டி
இதன்பிறகு புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசியலை விட்டே விலகப்போவதாக கூறினார். முன்னதாக சன் நியூசுக்கு அளித்த பேட்டியில், திமுகவிலிருந்து அழைப்பு வந்தால் போவேன் என்றும் கூறினார். இப்படி நிலை தடுமாறிய நிலையில் இருந்தால் நாஞ்சில் சம்பத்.
பிரச்சார பீரங்கி
திமுகவின் பிரசார பீரங்கியாக இருந்த இவர், வைகோ மதிமுகவை ஆரம்பித்ததும், அதில் இணைந்து திமுகவையும், கருணாநிதியையும் கடுமையாக தாக்கி பேசி வந்தார். இவரது வார்த்தை வாளுக்கு ஜெயலலிதாவும் இரையானவர்தான். 19 வருடங்கள் வைகோவின் வலதுகரமாக செயல்பட்ட இவர் இறுதியாக அதிமுக பக்கம் சாய்ந்தார்.
அன்போடு அழைக்கப்படுவார்
இந்நிலையில் திமுகவில் அழைப்பு வராத நிலையில் சசிகலாவை சந்தித்துள்ளார். சசிகலாவை தனக்கு யார் என்றே தெரியாது என கூறியிருந்த நாஞ்சில் சம்பத்துக்கு இன்று சசிகலா அறிமுகம் கிடைத்துவிட்டது. இனிமேல் 'இன்னோவா சம்பத்' என்று இவர் அன்போடு அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம்.