ராபர்ட் பயஸுக்காக முதல்வர் ஏன் துடிக்கவில்லை? நாதியற்றவனா தமிழன்? நாஞ்சில் சம்பத் பாய்ச்சல்
ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க முதல்வர் எடப்பாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என அதிமுக அம்மா கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
எல்லோருடைய கவனமும் குடியரசுத்தலைவர் தேர்தலில் யாருக்கு முடிசூட்டுவது என்கிற ஆடு புலி ஆட்டத்தில் பதிந்துவிட்டது ஆனால் 26 ஆண்டு காலம் செய்யாத குற்றத்திற்காக இருண்ட கொட்டடியில் இருக்கும் ராபர்ட் பயஸ் அவர்களின் விண்ணப்பம் யாரையும் பாதிக்கவில்லையோ என்கிற கவலை என்னை பாதித்து விட்டது.
சிறையில் வைத்தே எங்களை முடித்து விடுவது என்று மத்திய அரசு முடிவு எடுத்து விட்டது..இனி நன் உயிர்வாழ விருப்பமில்லை- கருணை கொலை செய்து விடுங்கள் என்று முதல்வருக்கு எழுதிய கடிதம் இதயத்தில் இரத்தத்தை கசிய வைத்துவிட்டது.

7 தமிழர் விடுதலை
இது பற்றி யாரும் கண்டுகொண்டதாகவோ ,கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை, மரணத்தின் மடியில் நிற்கும் அந்த 7 தமிழர்களின் தூக்குக்கயிறை அறுத்து எரிவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தவர் அம்மா.

கண்டுகொள்ளாத முதல்வர்
ஆனால் இன்றைக்கு அம்மாவின் அரசு ராபர்ட் பயஸின் கடிதத்தை மாண்புமிகு முதலமைச்சர் கண்டு கொண்டதாகவே கட்டிகொள்ளாதது மிகுந்த கவலையை தருகிறது. நாதியற்று போய்விட்டானா தமிழன் என்று நெஞ்சு நடுங்குகிறது.

நாதியற்றவனா தமிழன்
பிஹாரில் இருபவருக்காக துடிக்கிற முதலமைச்சர் ராபர்ட் பயசுக்காக ஏன் துடிக்கவில்லை? 7 தமிழர்களை விடுவிக்கும் அதிகாரத்தை அரசியல் சட்டம் மாநில அரசுக்கு வழங்கி இருக்கிறது.

விடுவிக்க நடவடிக்கை தேவை
அதைக் கருத்தில் கொண்டுதான் அம்மா தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார்கள் அதற்கு உயிர் தருகிற நேரம் இந்தநேரம், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 தமிழர்களை உடனடியாக விடுவிப்பதற்கு முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நியாயமே இல்லை
மடியில் வந்து விழுந்த மணிப்புறாவுக்கு உயிர் தருவதற்கு கால்தசையை அறிந்து தந்த சிபிச்சக்கரவர்த்தியும், ஒரு பசுவின் கண்ணீருக்கு பிராயச்சித்தமாக தன்னுடைய மகனை மரணத்திற்கு பரிசாக தந்த மனு நீதிசோழனும் ஆண்ட தமிழகத்தில் இவர்களை இருண்ட கொட்டடியில் அடைத்து வைத்து இருப்பது எந்த வகையிலும் நியாமில்லை. சகமனிதனின் கண்ணீரை துடைப்பதற்கும்,கவலையை உடைப்பதற்கும் பயன்பட்டால் அதற்கு பெயர்தான் அதிகாரம் இல்லாவிட்டால் சதிகாரன் எனும் பழிமட்டுமே மிஞ்சும்!












Click it and Unblock the Notifications