தமிழக மீனவர்களை இலங்கை தாக்க பலவீனமான மத்திய அரசே காரணம்: நரேந்திர மோடி!
திருச்சி: குஜராத் மற்றும் தமிழக மீனவர்களை பாகிஸ்தானும் இலங்கையும் கைது செய்ய பலவீனமான மத்திய அரசுதான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் இன்று நடைபெற்றை இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்ற நரேந்திர மோடி தொடக்கத்தில் சில நிமிடங்கள் தமிழில் பேசினார்.
தமிழ் மண்ணே வணக்கம்! பெரியோர்களே! தாய்மார்களே! வாலிப சிங்கங்களே அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாடு பெருமை உடைய நாடு. கம்பன், வள்ளுவர் பிறந்த பூமி. திருச்சி தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் மாவட்டம். மலைக்கோட்டையும் காவிரியும் கலந்து இருக்கும் மாவட்டம்.
சோழர்களின் தலைநகரம் உறையூர் இருக்கும் திருச்சி. இந்த நகரில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம் என்றார்.
இதைத் தொடர்ந்து தமிழன் என்று ஒரு இனம் உண்டு! தரணியில் அதற்கோர் குணம் உண்டு என்று பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என தமிழில் கூறினார்.
இதைத் தொடர்ந்து மோடி பேசியதாவது:
தமிழ் மக்கள் மன்னன் போல் இருப்பான். விசுவாசியாக இருப்பான். தமிழக மக்களுக்கு அவன் வேலை செய்யும் இடம் கோவிலாகும். தமிழ் பழமையான மொழி மட்டும் அல்ல. தமிழ் உலகில் இருக்கும் பெருமையுள்ள மொழிகளில் ஒன்று.
தமிழ் சங்க இலக்கியங்களைப் பற்றி அறிவதில் எனக்கு ஆர்வம் உண்டு. தமிழ் மக்களின் கடினமான அர்ப்பணிப்பு மனப்பான்மை காரணமாக முதன்மை மாநிலமாக முன்னேறி இருக்கிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் தேசிய, சர்வதேச தரத்தில் போட்டியிடுகின்றன.
தமிழர்தான் இ மெயிலையும் கண்டுபிடித்தவர். உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் தமிழர்கள்தான் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர்.
தமிழகமும், குஜராத்தும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இரண்டு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் நாட்டு விடுதலைக்காகப் போராடி இருக்கின்றனர்.
குஜராத்தில் இருந்து காந்தி தமிழகத்துக்கு வருவாரேயானால் இங்கே ராஜாஜி நம்பிக்கைக்குரியவர். தமிழகத்தில் இருந்து குஜராத்தை மான்செஸ்டர் என்று அழைக்கிற அளவுக்கு ஏராளமானோர் முன்னேற்றியிருக்கின்றனர்.
இங்கே ஒரு சிறிய குஜராத் என்று சொல்லும் அளவுக்கு செளகார்பேட்டை இருக்கிறது. குஜராத்திலேயே ஒரு சிறிய தமிழகமாக மணிநகர் இருக்கிறது. அந்த மணிநகர்தான் எனது சட்டசபை தொகுதி. மணிநகர் தமிழ் வாக்காளர்கள்தான் என்னை பெரும் வெற்றி பெற வைத்தனர்.
பாலில் சக்கரை இரண்டற கலந்து இருப்பதைப் போல தமிழர்களும் குஜராத்திகளும் வாழ்கின்றனர். இரண்டு மாநிலங்களுமே கடற்கரை மாநிலங்கள். இரண்டு மாநிலங்களுமே கடல் மார்க்கமாக பல நாடுகளுடன் வர்த்தகங்களை நடத்தியிருக்கின்றன.
கடற்கரையை ஒட்டி இருக்கிற நமது இரு மாநிலங்களுக்கும் சில முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. எப்படி குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனரோ, அதேபோல் இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.
குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் ஏன் தூக்கி செல்கிறது? தமிழக மீனவர்களை இலங்கை ஏன் தூக்கி செல்கிறது? இதற்கான தைரியம் இந்த நாடுகளுக்கு எப்படி வந்தது? பிரச்சனை கடல் மத்தியில் அல்ல.! மத்தியில் இருக்கிற பலமற்ற அரசால்தான் இந்த தைரியம் இந்த நாடுகளுக்கு வந்துள்ளது!!
குஜராத் அல்லது தமிழகம் அல்லது கேரளா அல்லது கர்நாடகாவாக இருந்தாலும் மீனவர்கள் தினசரி வேலைக்கு நிம்மதியாக செல்ல வேண்டுமெனில் மத்தியில் இருக்கும் பலவீனமான அரசு தூக்கி எறியப்பட வேண்டும். குஜராத்தில் இருக்கிற மீனவர்களை 6 மாதம் சிறையில் வைத்து பாகிஸ்தான் சித்திரவதை செய்கிறது. இதே நிலைமைதான் தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் நேருகிறது.
ஆனால் வாஜ்யாப் ஆட்சிக் காலத்தில்தான் இப்படி எதுவும் நடைபெறவில்லை. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் நம் மீனவர்கள் வாங்கிய படகுகளை பறிமுதல் செய்து கொள்ளும் பாகிஸ்தான் அதை வைத்து நமக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறது என்றார்