நான் மரியாதை தருபவன்... வேட்பாளர்கள் பெயரை மோடி அறிவிப்பார்: விஜயகாந்த்
நாமக்கல்: "இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்ற மோடிக்கு வாக்களியுங்கள் என்று நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய விஜயகாந்த் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று நாமக்கல் - மோகனூர் ரோடு அண்ணாசிலை அருகே திறந்தவேனில் நின்றவாறு வாக்கு சேகரித்தார், அப்போது அவர் பேசியதாவது:
மருத்துவக்கல்லூரி
"நாமக்கல் லோக்சபா தொகுதியில் எம்.பியாக உள்ள காந்திசெல்வன், மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது அவர் மக்களின் சுகாதாரத்தை பார்க்கவில்லை. அவ்வாறு பார்த்து இருந்தால், இங்கு மருத்துவ கல்லூரி கொண்டு வந்து இருப்பார்.
மக்கள் விரோத ஆட்சி
தி.மு.க., அ.தி.மு.க. என இரு கட்சிகளும் மக்களுக்கு எதையுமே செய்யாமல், மக்கள் விரோத ஆட்சியை செய்து வருவதால் தான் நான் அரசியலுக்கு வந்தேன். தற்போது இங்கு எனக்காக வரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு கேட்டு வந்து உள்ளேன். நரேந்திரமோடி பிரதமராக அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
மோடிக்கு வாக்களியுங்கள்
எனக்கு எந்த சாதி, மதமும் பிடிக்காது. அதனை பார்த்து வரவும் மாட்டேன். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அதுதான் என் குறிக்கோள். தமிழகத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்ற என்னால் முடியும். ஆனால் இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்ற எனக்கு சக்தி வேண்டும். அதற்காக தான் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்கிறேன்.
பாஜக கூட்டணி
இந்தியாவில் நலனுக்காக பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளேன். டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். உதிரி பாங்களின் விலை உயர்வால் லாரி பாடி கட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைத்து இடங்களில் லஞ்சம் உள்ளது. நல்ல கட்சிக்கு மக்கள் ஓட்டுப்போட வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடக்கூடாது என கூறினார்.
தேசிய கட்சிக்கு மரியாதை
என்னை பொறுத்த வரையில், நான் தேசிய கட்சிக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவன். எங்கள் கூட்டணியில் உள்ள தேசிய கட்சி தலைவர்கள் தமிழகத்தில் எந்தெந்த தொகுதி யாருக்கு? என்றும், யார் - யார் வேட்பாளர்கள்? என்பதையும் ஓரிரு நாட்களில் அறிவிப்பார்கள். அதன்பிறகு தான் நான் சொல்வேன்.
தமிழகத்தில் மின்வெட்டு
வருகிற லோக்சபா தேர்தல் ஆட்சிமாற்ற தேர்தல் இல்லை. இந்திய மக்களுக்கு விடுதலையை பெற்று தரும் தேர்தல் என ஜெயலலிதா சொல்கிறார். அப்படி என்றால் தமிழகத்திற்கு மின்வெட்டில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்?. நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருண்ட தமிழகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம் என்றீர்கள். தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்தீர்களா ?
பிரதமரை சந்தித்தேன்
தமிழகத்தில் இருந்து மக்கள் பிரச்சினைக்காக முதல்முறையாக எனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் நான் பிரதமரை சந்திக்க போனேன். ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் சென்றார்களா? வெறும் கடிதம் மட்டுமே எழுதுவார்கள். தமிழகத்தில் மின்சாரம் இல்லை என்றால், இணைப்பு பாதை இல்லை என காரணம் கூறுவது எல்லாம் ஏமாற்று வேலை.
தர்மபுரி, கிருஷ்ணகிரியில்...
இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரியில் பிரசாரம் செய்த விஜயகாந்த், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வருவேன் என ஜெயலலிதா கூறுகிறார். யாரிடம் கருப்பு பணம் உள்ளது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி அமைய, நரேந்திர மோடி பிரதமராக வாக்களியுங்கள் என்றார்.
எம்.ஜி.ஆர் பெயரை வைக்கல
அம்மா உணவகம், அம்மா குடிநீர் என பெயர் வைத்த ஜெயலலிதா, புரட்சி தலைவர் உணவகம், புரட்சி தலைவர் குடிநீர் என பெயர் வைக்காதது ஏன்?தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற உங்கள் காலில் விழுந்து கெஞ்சி கேட்டு கொள்கிறேன். இந்த கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும். வேட்பாளர் யார் என்பதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வார்கள் என்றார் விஜயகாந்த்.