ஓட்டு கேட்கும் வேட்பாளரிடம் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து... மதுரையில் அதிரடி
மதுரை: ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் தங்களது கோரிக்கைகளையும், தேவைகளையும் நிறைவேற்றி தருவோம் என்ற உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்க இயற்கைவள பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இயற்கை வளப் பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு சார்பில் நேற்று மதுரை கே.கே,நகரில் நீதியரசர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுசூழல் அமைப்புகள், லஞ்ச ஒழிப்பு இயக்கங்கள், மக்கள் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகள், விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு போராட்ட இயக்கங்கள் கலந்து கொண்டன.
அப்போது தமிழக சட்டசபைத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை பற்றி, அக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, ஊழலை ஒழிப்பது உள்பட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதோடு, தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி ஒன்றையும் அவர்கள் தயாரித்துள்ளனர். அதில் கையெழுத்து போடாத வேட்பாளர்களை புறக்கணிக்கவும், கையெழுத்து போட்ட வேட்பாளர்களில் சரியானவர்களை மக்கள் இனங்கண்டு கொள்ள உதவவும் வகையிலும் தமிழகத்திற்கு என பொதுவாகவும், குறிப்பான தொகுதிகளுக்கும் அங்கு நிலவும் பிரச்சினையை இனைத்துக் கொண்டும் இந்த உறுதிமொழிப் படிவம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் சொத்தை கைப்பற்றி அரசிடம் சேர்க்க வேண்டும், அப்படி செய்ய இயலாத பட்சத்தில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என வேட்பாளர் உறுதிமொழி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த 25 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 30 லட்சம் கோடி ருபாய் அளவிற்க்கு நடந்துள்ள ஆற்றுமணல்- கிரானைட்-தாதுமணல் உட்பட அனைத்து கனிமவள முறைகேடுகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், என்(வேட்பாளர்) மீதோ, என்(வேட்பாளரின்) கட்சி மீதோ ஊழல் புகார் எதுவும் கூறப்படுமாயின் மக்கள் முன்னாள் பகிரங்க விசாரணைக்கு உட்பட தாயாராயிருக்கிறேன் என்றும் வேட்பாளர் உறுதிமொழி அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,
இதுமட்டுமின்றி மேலும் பல கோரிக்கைகள் அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன.