திருவாரூர் மாவட்டத்தில் தொடர்மழை... 3000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின!
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Recommended Video

திருவாரூர்: வடகிழக்குப் பருவமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 3வது நாளாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளன. முறையான பாசன வாய்க்கால் மற்றும் வடிகால்வாய்களில் தூர்வாராததன் விளைவாகவே விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசு முன்கூட்டியே தூர் வாரும் பணியை செய்திருந்தால் பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று விவசாயிகள் கூறுகின்றனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் ம 1022 மையங்கள் கண்டறியப்பட்டு அங்கு மக்களை தங்கவைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நன்னிலம் தாலுகா நெம்மேலி பகுதியில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று திருவாரூர் மாவட்டம் தென் ஓடாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிரும் நீர் மூழ்கி வீணாகியுள்ளன. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் இந்தப் பகுதி விவசாயிகள் நேரடி விதைப்பு செய்துள்ளனர்.
ஆனால் 15 நாட்களில் மழை வந்ததால் பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 6 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் நெல் விதைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக இந்தப் பகுதியை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications