ராஜபக்சேவைப் பேச விடாமல் தடுக்க ஐ.நாவுக்கு போர்க்குற்ற ஆதாரங்களை அனுப்புங்கள் - நெடுமாறன்
இதுதொடர்பாக கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட இலங்கை எம்.பி.க்கள் குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இலங்கையில் இன மற்றும் கலாசார அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவது உள்ளிட்ட புகார்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திரமோடி இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் வழி என்று தெரிவித்துள்ளார். அது எத்தகைய அரசியல் தீர்வு என்று அவர் விளக்கவில்லை. அரசியல் தீர்வு என்பது பிரதிநிதிகள் சொல்வதை விட மக்களுக்கு பிடித்தமாக இருக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள், போரில் பாதிக்கப்பட்ட மக்கள், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவரிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தி எத்தகைய அரசியல் தீர்வு என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்.
இலங்கையில் இருந்து 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் அகதியாக வந்தவர்களிடம் அங்கு நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள், ஆவணங்கள் அதிகம் உள்ளன. அவற்றை வரும் அக்டோபர் 31-ந் தேதிக்குள் ஐ.நா.குழுவினரின் தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஐ.நா.சபையில் வரும் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் பேசுவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி. அவரை ஐ.நா. சபையில் பேச அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக அந்த அழைப்பை திரும்பப்பெற வேண்டும்.
ஐ.நா. அமைப்புக்கு அனைத்து தமிழ் அமைப்புக்கள், பொதுமக்கள் இதை வலியுறுத்த வேண்டும். இலங்கையில் தற்போது சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் கடல் பகுதி கட்டுப்பாடு சீனாவின் வசம் சென்று விட்டது.
தமிழகத்தில் புலிப்பார்வை திரைப்படத்தில் அதில் உள்ள சில ஆட்சேபனைக்கு உரிய காட்சிகள், வசனங்களை நீக்கிவிட்டு வெளியிட வேண்டும்.
கேரளத்தைப்போல் தமிழகத்திலும் படிப்படியாக மது ஒழிக்கப்பட வேண்டும். இதனால் வரும் வருவாய் இழப்பை கனிம வளங்களைப் பயன்படுத்தி அரசு ஈடு கட்டலாம். கிரானைட் தொழிலை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றார் நெடுமாறன்.