தீக்குளிக்க முயன்ற பஸ் டிரைவர் கைது - நெல்லை கலெக்டர் ஆபிசில் 7 வாசல்கள் மூடல்
நெல்லை மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார். ஆட்சியர் அலுவலகத்தின் 7 வாசல்களை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். 7 வாசல்களை போலீசார் நிரந்தரமாக மூடினர்.
நெல்லை ராமையன் பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன்,54. இவர் வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக டெப்போவில் டவுன் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட அலுவலகத்திற்கு சீருடையில் இன்று வந்த பாஸ்கரன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அவரை அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர்.
தீக்குளிக்க முயன்றது ஏன் என்று செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன் கூறினார். நான் அதிமுக போக்குவரத்து கழகத்தில் உறுப்பினராக உள்ளேன். தற்போது தினகரன் அணியில் செயல்பட்டு வருகிறேன். இதனால் அதிகாரிகள் எனக்கு வேலை தராமல் மிரட்டுகின்றனர். தொடர்ந்து எனக்கு வேலை தராததால் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.
தீக்குளிக்க முயன்ற பாஸ்கரனை பாளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பாஸ்கரன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கந்து வட்டி கொடுமையினால் கடந்த திங்கட்கிழமையன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு 4 பேர் தீக்குளித்து உயிரிழந்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9 வாசல்கள் ஏதாவது ஒரு வாசல் வழியாக வந்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். எனவே 7 வாசல்களை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கைகளை போலீசார் முடிவு செய்துள்ளனர்.