புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 83 இடங்களில் விபத்து; 9 பேர் பலி..128 பேர் காயம் !
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துக்களில் 9 பேர் பலியாகியுள்ளனர். 128 பேர் காயம் அடைந்தனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏராளமானோர் கூடி புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் மெரினா கடற்கரை,எலியட்ஸ் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவி வழக்கம்போல இந்த ஆண்டும் புத்தாண்டும் கொண்டாட்டங்களால் நிரம்பி வழிந்தது.
இதையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சரியாக 12 மணி அளவில் கடற்கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்த்து கோஷங்களை முழங்கி புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, இனிப்புகளை பறிமாறிக் கொண்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை போக்குவரத்து பிரிவு போலீசார் 300 இடங்களை கண்டறிந்து அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
வழக்கமாக குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார் நேற்று, புத்தாண்டு என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் அனைவரையும் எச்சரித்து அனுப்பினர். சிலரின் உறவினர்களை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இதே போல் நட்சத்திர ஓட்டல்களையும் கண்காணித்தனர். குடிபோதையில் இருப்பவர்களை அவர்களது வீட்டிற்கு ஓட்டல் நிர்வாகமே பொறுப்பேற்று அழைத்து செல்ல வேண்டும் அல்லது போதை தனியும் வரை ஓட்டலில் தங்க வைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவை பல்வேறு ஓட்டல் நிர்வாகத்தினர் நேற்று கடை பிடித்தனர்.
100 அடி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஜி.என்.டி.ரோடு, பூந்தமல்லி சாலை ஆகிய முக்கிய சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தினால் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் சென்னையில் 5 பேரும், ஸ்ரீ பெரும்புதூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் இறந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்கு தாம்பரத்தில் குடிபோதையில் இருந்தவர்கள் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
நகரின் பல்வேறு பகுதிகளில் சிறிய சாலைகளில் மட்டும் 83 இடங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 128 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். இவர்களில் 30 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.