இளைய மடாதிபதி நியமனம் இப்போது இல்லை - மதுரை ஆதினம்
மதுரை ஆதின மடத்திற்கு இளைய மடாதிபதி நியமனம் இப்போதைக்கு அவசியமில்லை என்று ஆதினம் அருணகிரி நாதர் கூறியுள்ளார்.
மதுரை: ஆதின மடத்தில் இருந்து நித்யானந்தாவை வெளியேற்றி தாம் பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இப்போதைக்கு புதிய மடாதிபதி நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் 292வது ஆதினம் அருணகிரி நாதர் கூறியுள்ளார்.
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. மதுரை ஆதீன நிர்வாகத்துக்குட்பட்ட கோயில்களிலும் நித்யானந்தா நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைகேட்டில் ஈடுபடும் மடாதிபதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும் ஹைகோர்ட் ஆணையிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8 வாரங்களுக்குள் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு நித்யானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய முற்பட்டார். சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை ஆதீனம் மடத்தின் 293 வது மடாதிபதியாகப் பிரகடனப்படுத்திக்கொண்டார்.
ஆதீனம் மடத்துக்குள் நுழையவும், அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்குத் தடை விதிக்கவும், நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தைப் பாதுகாக்கவும் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருணகிரி நாதர், மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய தாம் தடை விதித்ததில் எந்த மாற்றமும் இல்லை. ஆதினத்தின் கட்டளைக்கு கீழ்படியாதவர்கள் மடத்தை விட்டு வெளியேறித்தான் ஆகவேண்டும்.
இப்போதைக்கு ஆதின மடத்திற்கு புதிய வாரிசு நியமனம் செய்யப்படவேண்டிய அவசியமில்லை. சிவபக்தி நிறைந்த, சைவ சித்தாந்தங்கள் படித்த பண்டிதர், சிவனைப் பற்றி அறிந்தவர் வாரிசாக நியமனம் செய்யப்படுவார் என்றும் அதற்கான நேரம் வரும் போது தேர்ந்தெடுத்து பட்டம் கட்டுவோம் என்றும் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.