அவசர தேவைக்கு காசு இல்லை, ஆடம்பரத்திற்கு கார்டு இருக்கு: என்ன கொடுமை சார் இது!
சென்னை: பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையால் அவசர தேவைக்கு சில்லரை இல்லாமல் மக்கள் அல்லாடி வருகிறார்கள்.
கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் என தடை விதித்தார். பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியும் சிலர் அதிர்ச்சியில் உயிர் இழந்துள்ளனர்.
வங்கிகளில் போதிய அளவுக்கு பணம் இல்லை. மற்றும் ஏடிஎம் மையங்கள் பல வேலை செய்யவில்லை. சில ஏடிஎம் மையங்களில் கார்டை சொருகினால் பணம் எடுப்பதை தவிர வேறு எதுவானாலும் செய்யலாம் என்கிறது.
இந்த கொடுமைகளை எல்லாம் பார்த்து மக்கள் கடுப்பில் உள்ளனர். கையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்து என்ன செய்வது என தெரியாமல் உள்ளனர். வங்கிகளில் போய் மாற்றலாம் என்றால் கிலோமீட்டர் தூரத்தில் வரிசையில் ஆட்கள் நிற்கிறார்கள்.
இதனால் பணம் இருந்தும் சில்லரை இல்லாததால் பால், தண்ணீர், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் ஹோட்டல்களுக்கு சென்று கார்டை ஸ்வைப் செய்து சாப்பிட முடியுமா?
பணக்காரர்கள் செய்வார்கள். நடுத்தர, ஏழை மக்கள் தான் பாவம். மோடி அவர் பாட்டிற்கு நோட்டு செல்லாது என்று கூறி நம்மை அல்லாடவிட்டுவிட்டு ஜப்பான் பறந்துட்டாரே என மக்கள் கடுப்பில் முணுமுணுக்கிறார்கள்.