மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு.. சென்னை வெள்ளத்தை கண்முன் கொண்டுவரும் நாகர்கோயில்.. உதவ விரைவீர்
நாகர்கோவில்: மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, தலைநகர் நாகர்கோவில் உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் தென் பகுதிகளிலும் மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி கடலை ஒட்டி உருவான 'ஓகி' புயல் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்ட தென் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டதின் பெரும் பகுதிகளில் கடும் சூறைகாற்றுடன் மழை கொட்டுகிறது.
இதனால் குமரி மாவட்டத்தின் தென்னை, பலா என பலவகை மரங்களும் ஆயிரக்கணக்கில், முறிந்து விழுந்துள்ளன. இதனால் மின் வயர்கள் சேதமடைந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கடுமையான காற்று காரணமாக, நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தாலுகாவில், திசையன்விளை, குட்டம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கடைகளும் திறக்கப்படவில்லை என்பதால், மக்கள் அவசர தேவைக்கு மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை கூட வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கிட்டத்தட்ட 2015ம் ஆண்டு மழை வெள்ளத்தில் சென்னை மக்கள் தவித்ததை போன்ற நிலை குமரிமாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தன்னார்வ இளைஞர்கள் நாகர்கோவிலில் உதவி நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அவசியமாகிறது. அரசும் உடனடியாக அனைத்து வகை மீட்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் அருகே வசிக்கும், சுர்ஜித் 3 மாத கைக்குழந்தையுடன் வீட்டுக்குள் தவிப்பதாக நம்மிடம் தெரிவித்தார். செல்போனில் அவரை தொடர்பு கொண்டு பேசியபோது, மின்சாரம் மீண்டும் வர 3 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார்.
மெழுகுவர்த்தி போன்ற அவசர கால உதவி பொருட்களை அவரிடம் கொண்டு சேர்க்க, இந்த 98940 87217 செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.