விபத்துக்கு மகனா, மகளா என்று பாலினப் பாகுபாடு தெரியாது – இழப்பீடு வழக்கில் ஹைகோர்ட் “சுளீர்”!
சென்னை: விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு பாலின பாகுபாட்டின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயம் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி டெய்சி. இவருக்கு இரண்டு மகள்கள்.
அதில் 23 வயதான முதல் மகள் தனது தோழியுடன் ஆலந்தூரிலிருந்து அண்ணாநகருக்கு மோட்டார் சைக்கிளில் கடந்த 2007 ஆம் ஆண்டு சென்றுகொண்டிருந்தார்.
படுகாயமடைந்த மகள்கள்:
அப்போது மாநகர பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அருள்தாசின் மகள் இறந்துவிட்டார்.
அருள்தாஸின் வழக்கு:
இதையடுத்து, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில், அருள்தாஸ் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இழப்பீட்டுத் தொகை:
இந்த வழக்கை விசாரணை செய்த தீர்ப்பாயம் இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 13.57 லட்சம் வழங்க சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது.
உயர்த்தக் கோரி வழக்கு:
இந்த இழப்பீடு போதாது என்றும், இழப்பீடு தொகையை உயர்த்தி தரவேண்டும் என்றும் அருள்தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகம் மேல்முறையீடு செய்தது.
குழுத்தலைவிப் பணி:
இதனை விசாரித்த நீதிபதிகள், "மனுதாரர்களின் மகள் 23 வயதில் இறந்துள்ளார். அவர் இறக்கும்போது, பி.பி.ஓ நிறுவனத்தில் குழு தலைவியாக பணியாற்றியுள்ளார்.
சம்பளம் அடிப்படையில்:
மாதம் ரூபாய் 13 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளார். இந்த சம்பளத் தொகை அடிப்படையிலும், அவரது வயது, அவரது பெற்றோர்களின் வயது ஆகியவற்றின் அடிப்படையிலும் ரூபாய் 13.57 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு:
ஆனால், மனுதாரர்கள் இறந்த பெண்ணைச் சார்ந்து வாழ்ந்துள்ளனர். அவரது மகள் சம்பளம், ஊக்க ஊதியம் என்று மாதத்துக்கு ரூபாய் 19 ஆயிரத்து 500 பெற்றுள்ளார். விபத்தில் இறப்பவர்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் இழப்பீட்டை கணக்கிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.
ரத்து செய்யக் கூடாது:
அதே நேரம், போக்குவரத்து கழகம் சார்பில் தாக்கல் செய்த வழக்கில், மனுதாரரின் மகள் திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்றுவிட்டால், அவர் தன் வருமானத்தை பெற்றோருக்கு கொடுக்கமாட்டார். அதனால், இழப்பீட்டு தொகையை ரத்து செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.
வார்த்தை ஏற்புடையதல்ல:
ஆனால், தற்போதைய சமுதாயத்தில் மகன், மகள் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவரும் தங்களது பெற்றோரை கவனித்து வருகின்றனர். தங்களது சம்பளத்தில் ஒரு தொகையை பெற்றோருக்கு கொடுத்து வருகின்றனர். அதுவும், மகனைவிட மகள்தான் பெற்றோரை அதிகமாக கவனிக்கின்றனர். எனவே, போக்குவரத்து கழகத்தின் வாதத்தை ஏற்கமுடியாது. அந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
பாகுபாடு பார்க்க கூடாது:
எனவே, பாலினத்தின் அடிப்படையில் பாகுபாட்டுடன் இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்யமுடியாது. மனுதாரர் மகள் வாங்கிய சம்பளத்தின் அடிப்படையில் மனுதாரர்களுக்கான இழப்பீட்டினை ரூபாய் 17.13 லட்சமாக உயர்த்தி நிர்ணயம் செய்கிறோம். இந்த தொகையை, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.