தேர்தல் நாட்களில் மின்தடைக்கு 'தடை' கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம்...
சென்னை: தமிழகத்தில் வாக்குஒப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாட்களில் தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வரும் 24ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் மே மாதம் 16ம் தேதி நாடு முழுவதும் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன.
இதற்கிடையே கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை நிலவுகிறது. எனவே மின்தடையால் தேர்தல் பணிகள் பாதிக்கப் படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் கே.ஞானதேசிகனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பிரவீண்குமார் கூறியதாவது :-
வாக்குப்பதிவு அன்றும், ஓட்டு எண்ணிக்கை அன்றும் தடையற்ற மின்சாரம் வழங்கப் பட வேண்டும் என தமிழக மின்சார வாரிய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பேட்டரியில் இயங்குவதால், மின்சாரம் தடைபட்டாலும் வாக்குப் பதிவில் தடை இருக்காது.
மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பேட்டரியில் இயங்கும் விளக்குகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் தேர்தல் பணி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுவர்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.