நெல்லையில் காசு கொடுத்து தண்ணீர் பாய்ச்சியும் பலன் இல்லை... விவசாயிகள் கண்ணீர்
நெல்லையில் பருவமழை பொய்த்ததால் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி விவசாய நிலங்களுக்கு பாய்ச்சியும் கடும் வறட்சியால் பயிர்கள் கருகி வருகின்றன.
நெல்லை: நெல்லையில் விவசாய நிலங்களுக்கு காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பாய்ச்சியும் கடும் வறட்சியால் பயிர்கள் கருகி வருவதை கண்ட விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பாவூர்சத்திரம், சாலைபுதூர், மேலபட்டமுடையார்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வறட்சியால் காய்கறிகள் கருகி வருகின்றன. அங்குள்ள கிணறுகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தண்ணீர் வற்றி விட்டது.
இதனால் பயிரிடப்பட்ட காய்கறிகளை காப்பாற்ற லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகின்றனர். ஆனால் எங்கும் தண்ணீர் கிடைக்காததால் லாரி தண்ணீருக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கருகிய தென்னை
இந்த கோடையில் தண்ணீர் இல்லாமல் தென்னை மரங்கள் கூட கருகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயி முத்து என்பவர் கூறுகையில், எங்கள் வாழ்நாளில் நாங்கள் கண்டிராத வகையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வி்ட்டது. குடிநீரும் கிடைக்கவில்லை.
தண்ணீரும் இல்லை
பாசனத்திற்காக தண்ணீரும் கிடைக்கவில்லை. இதனால் ஏற்கனவே பயிர் செய்யப்பட்ட காய்கறிகளை காப்பாற்ற ஒரு லாரி தண்ணீரை ரூ.1000 கொடுத்து வாங்கி பாய்ச்சி வருகிறோம். இப்படி கஷ்டப்பட்டு விளைவித்த காய்கறிகள், பூக்களுக்கு போதிய விலை இல்லை.
விலை சரிவு
வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். எங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட கிலோவுக்கு ஒரு ரூபாய் கூட கூட்டி தர வியாபாரிகள் மறுக்கின்றனர்.
நஷ்டமே
இதனால் நஷ்டத்தையே தாங்கி நிற்கிறோம். இந்த நிலை நீடித்தால் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றார் அவர். இதே நிலையில்தான் அப்பகுதி விவசாயிகள் அனைவரும் உள்ளனர்.