காவிரி: ஏப். 11 முழு அடைப்புப் போராட்டத்துக்கு வணிகர் சங்கம் ஆதரவு இல்லை: வெள்ளையன்
11ம் தேதி நடக்கும் முழுஅடைப்புக்கு ஆதரவு இல்லை என தா.வெள்ளையன் கூறியுள்ளார்.
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 11-ந் தேதி நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். ஆனால் அதேநேரத்தில், அரசியல் சாராத அனைத்து காவிரி விவகார போராட்டங்களுக்கும் தமது ஆதரவு என்றும் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே வரி என்று ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தது. சில்லரை வணிகர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று வியாபாரம் பார்ப்பதில்லை. இதனால் சில்லரை வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இ-வே பில்லை கைவிட வேண்டும். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. நியூட்ரினோ, ஈத்தேன், மீத்தேன், ஸ்டெர்லைட் திட்டங்களை தமிழகத்தில் திணிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடக்கும் கடையடைப்பு போராட்டங்களுக்கு முழு ஆதரவு உண்டு. வருகிற 11ம் தேதி நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கிடையாது.
அரசியல் சாராத அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு உண்டு. மத்திய அரசு தனது போக்கை மாற்றாவிட்டால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும்.
இதேநிலை நீடித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு என்னவாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மே 5ல் நடக்கும் மாநாட்டில் சில்லறை வணிகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த்சின்ஹா கலந்து கொண்டு பேச உள்ளார்.
திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றத்தில் வணிகர்களை கட்டாயமாக மாற்ற முயற்சித்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும். இவ்வாறு வெள்ளையன் தெரிவித்தார்.