தமிழகத்தில் மெல்லத் திரும்பும் இயல்பு நிலை… போலீஸ் உதவியுடன் பேருந்துகள் இயக்கம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சாலைமறியல், கலவரத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 100 இடங்களில் சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு போராட்டங்களில் அதிமுகவினர் ஈடுபட்டனர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
உருவபொம்மை எரிப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு பெங்களூரில் வெளியானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்கள் அந்தந்தப் பகுதிகளில் சாலை மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
படங்கள் எரிப்பு
சென்னையில் பாரிமுனை, தியாகராயநகர்,வியாசர்பாடி, திருவான்மியூர்,அடையாறு, நீலாங்கரை, சோழிங்கநல்லூர், கிண்டி, பெரம்பூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுப்பிரமணிய சுவாமி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் உருவப் படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100 இடங்களில் மறியல்
இதேபோல், ரெட்டேரி, ஆவடி, அம்பத்தூர், அண்ணாசாலை, யானைக்கவுனி, மின்ட், மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்தக் கட்சியினர் போராட்டம் நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தினால் சென்னை நகரம் சிறிது நேரம் செயல் இழந்தது.
போக்குவரத்து முடக்கம்
ஒரு சில இடங்களில் பேருந்துகள் எரிக்கப்பட்டதால் நேற்று மதியம் முதலே மாநகரப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். ஏராளமானோர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்கினர்.
திரும்பும் இயல்பு நிலை
இரவு முழுவதும் காவல்துறையினர் வாகனங்களில் ரோந்து வந்தனர். இதனையடுத்து வன்முறைகள் நிகழாதவகையில் கட்டுப்படுத்தப்பட்டது. காலை முதல் சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
சேலத்தில் போக்குவரத்து
சேலம் புது பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பெங்களூரூ, கோவை உள்ளிட்ட வெளியூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேசமயம் 382 தனியார் பேருந்துகள் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.
காய்கறி சந்தைகள் விடுமுறை
சேலம் மாவட்டத்தில் 11 காய்கறிசந்தைகளான உழவர் சந்தைகளுக்கு விடுமுறை என மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இம்மாவட்டத்தில் தினந்தோறும் ரூ.60-70 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டதால் விவசாயிகள் வர்த்தகம் இல்லாததால் அவதிக்குள்ளாகினர்.
போலீஸ் பாதுகாப்புடன்
திருச்சி, திருப்பூர், கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் பேருந்து போக்குவரத்து போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. கடலூரில் கிராமப்புற பேருந்துகள் அனைத்தும் இன்றும் நிறுத்தப்பட்டுள்ளன. வெளியூர் செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படுகின்றன.
குமரியில் 2வது நாளாக
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற வன்முறையில் 7 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரவு நேர ‘ஸ்டே' பஸ்கள் அந்தந்த டெப்போவுக்கு திரும்பிச் சென்றது. பஸ்கள் நிறுத்தப்பட்டதால் வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள், பெண்கள் அவதிப்பட்டனர்.
காலையில் தொடங்கிய போக்குவரத்து
இன்று காலையில் 8 மணி வரை பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. திருவனந்தபுரம் மற்றும் நெல்லைக்கு மட்டும் ஓரிரு பேருந்துகள் ஓடின. அவற்றிலும் பயணிகள் யாரும் இல்லை. காலை 9 மணிக்கு மேல் புறநகர் பேருந்துகள் ஒவ்வொன்றாக ஓடத்தொடங்கின.
கடையடைப்பு
நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் மூடிக்கிடந்தன. காலையில் ஒருசில டீக்கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. அவைகளும் சிறிது நேரத்தில் மூடப்பட்டு விட்டது. இதனால் நாகர்கோவிலுக்கு வந்த வெளியூர்வாசிகள் எதுவும் வாங்க முடியாமல் அவதிக்கு ஆளானார்கள். மருத்துவமனையில் தங்கி இருந்தவர்களும் உணவு கிடைக்காமல் தவித்தனர்.
களையிழந்த கடற்கரை
கன்னியாகுமரியில் உள்ள பெரும்பாலான கடைகள் இன்றும் 2-வது நாளாக மூடிக்கிடந்தன. சிறு கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்களும் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் கடற்கரையும் களை இழந்து காணப்பட்டது.