அதிமுகவில் இருந்து முதல்வர் ஓபிஎஸ் நீக்கம்- சசிகலா அதிரடி அறிவிப்பு
சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார்.
முதல்வர் பதவியில் இருந்து தம்மை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ஓ. பன்னீர்செல்வம். இதையடுத்து அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவதாக அறிவித்தார் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கலகக் குரலுக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலர் பொன்னையன் உள்ளிட்டோர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.
ஆட்சி அமைக்க உரிமை கோரிய சசிகலா
நாளுக்கு நாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கான ஆதரவு பெருகியது. இதனிடையே ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோரியிருந்தார். அதேபோல் சசிகலா தம்மை ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருந்தார்.
ரிசார்ட்டில் சிறை
அத்துடன் அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா சிறை வைத்தார். ஆளுநர் தம்மையே ஆட்சி அமைக்க அழைப்பார் என நம்பிக்கையுடன் காத்திருந்தார் சசிகலா.
சிறை தண்டனை
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும் சசிகலா உள்ளிட்டோர் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு தவிடு பொடியானது.
ஓபிஎஸ் நீக்கம்
இந்த தீர்ப்பு வெளியான நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவதாக சசிகலா அறிவித்துள்ளார். அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக சசிகலா தெரிவித்துள்ளார்.