சசியிடம் எரிமலையாக வெடித்த ஓபிஎஸ்- எதிர்க்கட்சிகளே பாராட்டிய இன்றைய தினத்தை மறக்க முடியுமா?
பதவியே வேண்டாம் என்று பொதுவெளியில் நடித்த சசியின் முகத்திரையை ஓ.பன்னீர் செல்வம் கிழித்த இந்த நாளை மறக்க முடியுமா?
Recommended Video

சென்னை: அக்காவே போன பிறகு, எனக்கு பதவி வேண்டாம் என்று பொதுவெளியில் நடித்த சசிகலாவின் முகத்திரையையும் அவரது முதல்வர் பதவி ஆசையையும் ஓ பன்னீர் செல்வம் தோலுரித்து காட்டிய தினம் இன்றுதான் என்பதை யாராலும் மறக்க முடியாது.
டான்சி, சொத்துக் குவிப்பு வழக்குகளுக்காக சிறை சென்றபோது ஜெயலலிதாவால் முதல்வர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் ஓபிஎஸ். நம்பிக்கைக்குரியவர்களுள் இவரும் ஒருவர். தேனி மாவட்டத்தில் டீக்கடை வைத்திருந்த இவரை அழைத்து வந்து நகர் மன்றத் தலைவர், எம்எல்ஏ, நிதி அமைச்சர், முதல்வர் என பல்வேறு ஆட்சி பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா என்ற பெயருக்கேற்ப பெரும்பாலும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்று வீர நடை போட்ட இவரது மூச்சு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியுடன் நின்றுவிட்டது.

முதல்வராக ஓபிஎஸ்
இதையடுத்து வழக்கம்போல் ஜெயலலிதா இல்லாத நேரங்களில் முதல்வராக செயல்பட்ட ஓபிஎஸ்ஸையே முதல்வராக்க உறுப்பினர்கள் திட்டமிட்டு அதை செயல்படுத்திவிட்டனர். ஆனால் அதிமுக என்ற கழகத்தை கட்டி ஆள நினைத்த சசிகலாவோ தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு பொதுச் செயலாளர் பதவிக்கு அடிபோட்டார். அதன்படி சசிகலா ஆதரவாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சசிகலாவை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தனர்.

வழிநடத்த வேண்டும்
அப்போது ஜெயலலிதா இறந்த வருத்தத்தில் இருந்த சசிகலாவோ சோகமே உருவாக இருந்தார். கட்சியை வழிநடத்த அவரது காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடினர். ஆனால் சசியோ அக்காவே போன பிறகு எனக்கெதுக்கு பதவி என்றார். ஒருவழியாக பொதுச் செயலாளர் பதவியை பெற்றார். அத்தோடு சும்மா இருந்தாரா சசிகலா, முதல்வர் பதவிக்கும் ஆசைப்பட்டார். அதற்காக கட்சியும் ஆட்சியும் ஒருவர் கையில் இருக்க வேண்டும் என்று ஆதரவாளர்களை சொல்ல வைத்தார்.

நற்பெயர் எடுத்த ஓபிஎஸ்
ஆனால் ஓபிஎஸ்ஸோ இதை கண்டுகொள்ளாமல் முதல்வர் பதவியை தொடர்ந்தார். இதனால் சசிகலா ஆதரவாளர்கள் எத்தனை அவமானப்படுத்தியும் அதை புன்சிரிப்புடன் எதிர்கொண்டார். சசிகலாவே இவரை தலைமை கழகத்தில் அவமதித்தார். எனினும் பொறுமை காத்தார் ஓபிஎஸ். வர்தா புயல், ஜல்லிக்கட்டு பிரச்சினைகளில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயரை பெற்றார்.

ராஜினாமாவும் ஏற்பு
இதையடுத்து சசிகலா முதல்வராக கூடாது என்று தமிழக மக்கள் நினைத்திருந்த வேளையில் , ஓபிஎஸ் தனது பதவியை கடந்த ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை முதல்வராக தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஓபிஎஸ் தியானம்
இதையடுத்து யாரும் எதிர்பார்க்காத வேளையில் பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்தார். இதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி. சுமார் 20 நிமிடங்கள் கழித்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், முதல்வர் பதவிக்காக தன்னை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தித்ததாகவும் மிரட்டியதாகவும் கூறினார். இதை சற்று எதிர்பார்க்காத சசிகலாவின் கோபத்தை அன்றைய இரவு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிந்தது.

மக்கள் நிம்மதி
அக்காவே இல்லாத போது பதவியே வேண்டாம் என்று கூறியே பக்காவாக காய் நகர்த்திய சசிகலாவின் சாயத்தை வெளுத்த ஓபிஎஸ்ஸை எதிர்க்கட்சியினரும் மனதுக்குள் பாராட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதிமுகவினர் என்றால் வளைந்த முதுகுடன் அம்மா, சின்னம்மா வித்தியாசம் இன்றி இருப்பர் என்ற வழக்கத்தை முதல் முறையாக தகர்த்தெறிந்தவர் பன்னீர் செல்வம். அவர் தியானம் இருந்த தினம் இன்றுதான். தர்மயுத்தம் தொடங்கிய நாளும் இன்றுதான்.












Click it and Unblock the Notifications