ரூ30 கோடி பேரம் பேசிய சசி கோஷ்டி: அதிமுக எம்.எல்.ஏ. மனோகரன் பகீர் தகவல்
சசிகலா கோஷ்டியிலேயே இருக்க ரூ30 கோடி பேரம் பேசினார்கள் என ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ. மனோகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜபாளையம்: அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது சசிகலா கோஷ்டியில் இருக்க தம்மிடம் ரூ30 கோடி பேரம் பேசினார்கள் என வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோகரன் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் கலகக் குரல் எழுப்ப எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் கொண்டுபோய் அடைத்தார் சசிகலா. அப்போது எம்.எல்.ஏ.க்களுக்கு பலகோடி ரூபாய் பணம், தங்கம் லஞ்சமாக தரப்பட்டதாக கூறப்பட்டது.
சரவணன் வீடியோ
ஆனால் சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏக்கள் இதை மறுத்து வந்தனர். இந்த நிலையில் அண்மையில் ஓபிஎஸ் கோஷ்டி எம்.எல்.ஏ. சரவணன், இந்த பேரங்கள் தொடர்பாக பேசும் வீடியோ காட்சி வெளியாகி இருந்தது.
மனோகரன் எம்எல்ஏ
அதேநேரத்தில் அது தம்முடைய குரல் அல்ல எனவும் சரவணன் கூறியிருந்தார். இதனிடையே ராஜபாளையத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரன் பங்கேற்றார்.
ரூ30 கோடி பேரம்
இந்த கூட்டத்தில் பேசிய மனோகரன், அ.தி.மு.க.வில் பிளவு வந்தபோது சசிகலா கோஷ்டியிலேயே இருக்க ரூ.30 கோடி வரை பேரம் பேசினார்கள். ஆனால் அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை.
ரூ300 கோடி கொடுத்தாலும்
அதனால்தான் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நிற்கிறோம். நீங்கள் 300 கோடி ரூபாய் கொடுத்தாலும் சசிகலாவை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்றார்.