முதல்வர் பதவியை கேட்டதும் விட்டுக் கொடுத்த ஓ.பி.எஸ். துணை முதல்வர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக வசதியாக ஓ. பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு முதல் முறையாக கடந்த மாதம் 27-ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மீண்டும் ஒரே வாரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சசிகலா வரும் 9ம் தேதி முதல்வராக பதவியேற்கக்கூடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பன்னீர்செல்வம் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் மத்தியில் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ள சசிகலா முதல்வராக பதவியேற்க வசதியாக பன்னீர்செல்வம் பதவியை துறந்துள்ளார். சசிகலா முதல்வராக பதவியேற்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.