சென்னையில் ஓபிஸ் அணியினர் உண்ணாவிரதம்... மீண்டும் காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு
ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு நாளை மறுநாள் ஓ.பன்னீர் செல்வமும் அவரது அணியினரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் மனு அளித்துள்ளனர்.
சென்னை: ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு சென்னையில் மார்ச் 8 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஓ.பன்னீர் செல்வமும் அவரது அணியினரும் அறிவித்திருந்தனர். ஆனால், போலீசார் அனுமதி குறித்து பதில் அளிக்காத காரணத்தால் மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
ஓ.பி.எஸ் அணியினர், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தீர்மானித்திருந்தனர். அதற்காக காவல்துரையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்தனர். அவர்களுடைய மார்ச் 8ஆம் தேதி போராட்டத்துக்கு, அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதை அடுத்து அவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று, போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
இதுதொடர்பாக கூறிய கே.பி. முனுசாமி,''நாங்கள் ஏற்கனவே மனு அளித்துவிட்டோம். ஆனால் இதுவரை எங்களுக்கு போலீசார் தரப்பிலிருந்து பதில் ஏதும் வரவில்லை. அதனால் நாங்கள் ஏற்கனவே அனுமதி கேட்டு கொடுத்துள்ள மனுவை நினைவூட்டும் விதமாக இன்று மறுபடியும் மனு அளித்துள்ளோம். இன்று மாலைக்குள் பதில் அளிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்'' என கூறினார்.