அதிமுக கட்சிக்கு தலைமை.. அதிக அதிகாரம் படைத்தவரானார் ஓபிஎஸ்
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போதைய அதிமுகவில் அதிக அதிகாரம்படைத்தவர் என்ற பெருமையை பெறுகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவி பறிபோனதும், தர்ம யுத்தம் நடத்துவதாக கூறிக்கொண்டு அதிமுக கட்சியை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா சிறைக்கு சென்றார்.
இதன்பிறகு அந்த அதிகாரம், துணை பொதுச்செயலாளர் என்ற பதவியில் அமர வைக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு போனது.
பொதுச்செயலாளர் பதவியிடம்
ஆனால் இன்றைய பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் என்ற பதவியை நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயிரோடு இருந்தவரை ஜெயலலிதாவை அதிமுக நிர்வாகிகள், நிரந்தர பொதுச்செயலாளர் என்றே அழைத்து வந்தனர். அதற்கு ஏற்ப அந்த பதவியிடம் நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதிகபட்ச அதிகாரம்
ஆனால், தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பதவி பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்குரிய அதிகாரங்கள் இந்த பதவிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமிக்க பதவியில் பன்னீர்செல்வம் அமர வைக்கப்பட்டுள்ளார்.
அதிகாரம் பரவல்
அதேநேரம், பன்னீர்செல்வம் தரப்பை நம்ப எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தயாராக இல்லை. எனவே இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி அமர வைக்கப்பட்டுள்ளார். கட்சியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பதை இவ்விருவரும் இணைந்தே செய்ய முடியும். எனவே அதிகாரத்தில் எடப்பாடியும் பங்கு பெற்றுள்ளார்.
கோரிக்கைகள் நிறைவேற்றம்
ஆட்சி அதிகாரத்தில் துணை முதல்வராக பன்னீர் செயல்படுவதால், கட்சி அதிகாரத்தில் துணை பொறுப்பை எடப்பாடி பெற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம், இணைவதற்கு முன்பாக பன்னீர்செல்வம் கேட்ட கோரிக்கைகள் பெரும்பாலும் நிறைவேறிவிட்டன. ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி, கட்சியின் தலைமை பதவி என வழங்கப்பட்டு பன்னீர்செல்வம் மகிழ்விக்கப்பட்டுள்ளார்.