ஓகி புயலால் மாயமான மீனவர்களை தேட மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு
ஓகி புயலால் மாயமான மீனவர்களை தேட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்: ஓகி புயலால் மாயமான மீனவர்களின் நிலை குறித்து விசாரணை நடத்தவும், அவர்களை மீட்கவும் நீதிமன்றம் மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆன்டோ லெனின் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மாதம் 29, 30-ஆம் தேதிகளில் ஓகி புயல் கன்னியாகுமரியை கடுமையாக தாக்கியது. இதில் மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
முன்னதாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பலர் வீடு திரும்பவில்லை. இதன் மீனவர்கள் பெரும்பாலும் 150 கடல் மைல் ஆழ்கடலில் மீன்பிடிக்க கூடியவர்கள். ஆனால் அரசு சார்பில் ஆழ்கடலில் 50 கடல் மைல் தொலைவிலேயே தேடியுள்ளனர். இதனால் ஆழ்கடல் மீனவர்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனது உறவினர்கள் பலரை காணவில்லை. ஹெலிகாப்டர் மூலம் தேடியது போதுமானதாக இல்லை.
புயலுக்கு முன்னதாக மீன்பிடிக்க சென்ற 550 மீனவர்களை காணவில்லை. இதனால் நீதிமன்றம் தலையிட்டு மாயமான மீனவர்கள் 550 பேரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுப்பையா, மனுவுக்கு மத்திய, மாநில உள்துறை அமைச்சர்கள், தேசிய பேரிடர் ஆணைய செயலர், மீன்வளத்துறை செயலர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.