நெல்லை, தூத்துக்குடி கோயில்களில் ‘அன்னதான தரம்’ குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு
நெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடியில் அன்னதானம் வழங்கப்படும் கோயில்களில் அவற்றின் தரம் குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கும் கோயில்களில் வருடம் முழுவதும் மதியவேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கோயில்களின் வருவாய் மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்ப தினமும் 100 அல்லது 50 பேருக்கு அன்னதானம் அளிக்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் கோயில்களில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் அறநிலையத் துறை அதிகாரிகள் அனைத்து கோயில்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மண்டல அளவில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 55 கோயில்களில் அறநிலைய துறை இணை ஆணையர் அன்புமணி, மற்றும் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், முக்கிய அலுவலர்கள் அன்னதானம் நடைபெறும் கோயில்களில் முன் அறிவிப்பின்றி திடீரென மதிய வேளையில் புகுந்து ஆய்வு நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமிகோவில், நெல்லை வரதராஜ பெருமாள் கோயில், வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில், பாளை ராமசாமி கோவில், சாலைகுமரன் கோவில் உள்பட 29 கோயில்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி சிவன் கோயில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளிட்ட 16 கோயில்களிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில், சுசீந்திரம் தானுமலை அம்மன் கோவில் உள்ளிட்ட 10 கோயில்களிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இது போல் தமிழகத்தில் அன்னதானம் நடைபெறும் அனைத்து கோயில்களிலும் உணவு தரமாகவும், ருசியாகவும் இருக்கிறதா என்றும், சாப்பிட வந்தவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications