அதிமுக, திமுக கொடிக் கம்பங்களை அகற்றிய பறக்கும் படை.. எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிமுக, திமுக கொடிக்கம்பங்களை அகற்றியதற்கு இரு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
டிஆர் நாயுடு தெரு, செல்வீஜர் தெரு, எட்டயபுரம் ரோடு ஆகிய பகுதிகளி்ல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். இதில் மேற்குறிப்பிட்ட இடங்களில் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தன. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் அகற்றினர். மேலும் பல கொடி கம்பங்களை அறுத்து எடுத்து சென்றனர்.
அதிமுக கொடிக் கம்பங்களை அகற்றிய போது அப்பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன் தலைமையிலான அதிமுகவினர் அங்கு வந்து வாக்குவாதம் செய்தனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கொடி கம்பங்களை அகற்றி எடுத்து சென்றனர்.
இது போல் ஜெல்வீஜர் புரத்தில் திமுக கொடி கம்பங்களையும், எம்ஜிஆர் காலனியில் திமுக பெயர் பலகையையைும் வெல்டிங் மூலம் அறுத்து எடுத்து சென்றனர். இந்த தகவல் அறிந்து நகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார் தலைமையிலான திமுகவினர் அங்கு வந்து பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைப்படி கொடிக் கம்பங்களில் துணிகள் சுற்றி மறைக்கதான் தேர்தல் கமிஷன் கூறியுள்ளதே தவிர அறுத்து எடுத்த செல்ல சொல்லவில்லை என கூறி திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதனப்படுத்தினர். பிறகு கொடிக் கம்பங்கள், பெயர் பலகை சேதம் இல்லாமல் அகற்றப்பட்டது.