ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் காவிரி டெல்டாவில் நிலத்தடி நீருக்கும், மண்ணுக்கும் பேராபத்து-பகீர் தகவல்
ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் நிலத்தடி நீருக்கும், மண்ணுக்கும் ஆபத்து உள்ளது என்று ஆய்வு மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தினால் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள நிலத்தடி நீருக்கும், மண்ணின் வளத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கடற்கரை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனினும் மத்திய அரசும், அந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தங்கள் திட்டத்தால் நிலத்தடி நீருக்கும், மண் வளத்துக்கும் விவசாயத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகின்றன.
மண் மாதிரிகள் ஆய்வு
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கடற்கரை ஆராய்ச்சி மையம் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்திலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருபுஞ்சையிலும், நாகை மாவட்டத்தில் உள்ள நரிமணத்திலும் மண், நீர் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது. திருபுஞ்சையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் இருந்தும், அதேபோல் நரிமணத்தில் சிபிசிஎல் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு அருகே உள்ள இடத்தில் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 4 மண் மாதிரிகள், 2 நீர்மாதிரிகள், ஒரு நிலத்தடி நீர் மாதிரி ஆகிய மொத்தம் 7 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
பகீர் தகவல்
இந்த ஆய்வில் ஓஎன்ஜிசியும், சிபிசிஎல் நிறுவனமும் டெல்டா பகுதிகளில் மேற்கொண்டு வரும் ஹைட்ரோகார்பன் நடவடிக்கைகளால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஹைட்ரோ கார்பனுடன் தொடர்புடைய எண்ணெய் பிரித்தெடுத்தல், சுத்திகரித்தல் ஆகிய பணிகளால் 7 மாதிரிகளும் மாசடைந்துள்ளது.
புகாரின் பேரில் ஆய்வு
ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த ஆய்வு செய்யப்பட்டதாக ஆய்வு மேற்கொண்டவர்களின் ஒருவரான சுற்றுச் சூழல் ஆய்வாளர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நமது ஒன்இந்தியா தமிழுக்கு மேலும் கூறுகையில், பொதுமக்களின் பங்களிப்புடன் இதுபோன்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அதற்கான செலவான ரூ.42 ஆயிரத்தை பொதுமக்களே ஏற்றுக் கொண்டனர். 3 மாவட்டங்களில் இருந்து மாதிரிகளை எடுத்து அரசு பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விவசாயத்தை தியாகம் செய்ய முடியாது
ஹைட்ரோகார்பன் திட்டங்களால் காவிரி டெல்டா மாவட்டங்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளன. அவை மேலும் பாதிக்கப்படாமல் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. இதை ஓஎன்ஜிசியும், அரசும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஹைட்ரோ கார்பன் நடவடிக்கைகளையும் விவசாயத்தையும் ஒன்றாக செயல்படுத்த வைக்க முடியாது, மேலும் விவசாயத்தை தவிர்த்துவிட்டு தியாகம் செய்ய முடியாது. நரிமணத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு எண்ணெய் கசிவினால் ஏற்பட்ட தாக்கம் இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்றார்.
மத்திய அரசு பொய்
கதிராமங்கலத்திலும் அண்மையில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி நடந்த எண்ணெய் கசிவால் நீரும், மண்ணும் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. கதிராமங்கலத்தை சுற்றிலும் 29 எண்ணெய் கிணறுகளை ஓஎன்ஜிசி ஏற்படுத்தியுள்ளது. எனவே ஹைட்ரோகார்பன் திட்டங்களால் விவசாயத்துக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று மத்திய அரசும், ஓஎன்ஜிசியும் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆய்வானது அவர்களின் கருத்துகள் பொய் என்பதை நிரூபித்துள்ளது.