மீண்டும் கிருஷ்ணசாமியிடம் சிக்கிய கமல்! இந்த முறை ஓங்கப்போவது யார் கை?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசப்பட்ட 'சேரிபிஹேவியர்' என்ற வார்த்தைக்காக நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கமல் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், அந்த வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இந்த வார்த்தையை பேசிய காயத்ரி ரகுராமியின் தாயார், தனது மகளுக்கு பதில், தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கலாசார சீர்கேட்டை பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்துவதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் கமல் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போது புதிய தமிழகம் வேறு காரணத்திற்காக போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஜெயலலிதா ஆட்சி
கமல் vs கிருஷ்ணசாமி விவகாரம் ஏற்கனவே ஒருமுறையும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதுதான். அது ஜெயலலிதா ஆட்சி நடைபெற்ற காலகட்டம். சண்டியர் என்ற பெயரில் திரைப்படம் எடுத்தார் கமல். இதை அறிந்ததும் கடும் கோபமடைந்தார் கிருஷ்ணசாமி.
சண்டியர் ஜாதி பெயர்
சண்டியர் என்ற பெயர் ஜாதி கலவரத்தை தூண்டிவிடும் என்று கிருஷ்ணசாமி அச்சம் தெரிவித்தார். அதுமட்டுமல்ல, சண்டியர் படத்தின் படப்பிடிப்பை தென் மாவட்டங்களில் நடத்தவிட மாட்டேன் என்றும் அறிவித்தார். கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், படப்பிடிப்பை நடத்த முடியாமல் தடங்கல் ஏற்பட்டது. இருப்பினும் சளைக்காத கமல்ஹாசன் படப்பிடிப்பை சென்னையில் வைத்தும், திருவள்ளூர் பகுதி கிராமங்களில்வைத்தும் எடுத்து முடித்தார்.
விருமாண்டி
இருப்பினும் படம் ரிலீசாகும்போது பெரும் பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் இருந்தனர். எநவே, படத்தின் பெயரை சொல்லாமல் படு ரகசியம் காத்து வந்த கமல் அதற்கு விருமாண்டி என்று பெயர்சூட்டிவிட்டார். அந்தப் படத்தின் பாடல் கேசட்டுகளை சென்னை கேம்பகோலா மைதானத்தில் வைத்து ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டார் கமல்.
பாராட்டு
ஒருவழியாக, கிருஷ்ணசாமியும் கோபம் தணிந்தார். கமல்ஹாசன் படத்தின் புதிய பெயர் சூட்டல் குறித்து கருத்து தெரிவித்த கிருஷ்ணசாமி, கமலின் இந்த அறிவிப்பைவரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இது திரையுலகினரின் மன மாற்றத்துக்குக்கான முன் மாதிரியாக இருக்கும்என்று கருதுகிறேன் என்றார். படம் 2004ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
கிண்டல் பேட்டி
அந்த காலகட்டத்தில் கமல் அளித்த பேட்டியொன்றில், கிருஷ்ணசாமியை கிண்டல் செய்தார் இந்தப் படத்துக்கு ‘சண்டியர்' என்று பெயர் வைக்கக் கூடாது. அண்ணன் கிருஷ்ணசாமி கோவிச்சிக்குவாரு. ‘கிட்டிவாசல்'னு வைக்கலாம் என்று இருந்தோம். ஆனா, அப்படி பேரு வச்சம்னாலும் கிருஷ்ணசாமி கோவிச்சிக்குவாரு. ஏன்னா, அவர் செல்லப்பேரு கிட்டி. ‘அரங்கேற்றம்'னு பெயர் வைக்கலாம்னா அது எங்க வாத்தியர் படத்தோட பேரு. அவர் கோவிச்சிக்குவாரு. ‘அவ்வையார்'னு வைக்கலாமான்னு பாத்தோம், ஆனா, அவ்வையாருக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமே இல்ல. ‘காளமாடு', ‘முரட்டுக்காளை'ன்னு வச்சா ரஜினிகாந்த் கோவிச்சிக்குவாரு. ‘பராசக்தி'ன்னு வைக்கலாமான்னு பாத்தோம். கலைஞர் கோவிச்சுக்குவாரு. இவ்வாறு கூறினார் கமல்.
ஜாதி கலவரம்
முன்னதாக தேவர் மகன் என்று பெயரிட்டு கமல் எடுத்த படமும் அதில் இடம் பிடித்த ஒரு பாடலும் தென் மாவட்டங்களில் ஜாதி கலவரத்திற்கு ஒரு காரணமாக மாறிவிட்ட பெரும் சோகத்தை மனதில் வைத்துதான் கிருஷ்ணசாமி இவ்வாறு பிடிவாதம் காட்டினார் என அவரது கட்சியினர் கூறினர். ஆனால் விளம்பரத்திற்காக இவ்வாறு செய்தார் என கமல் ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
மீண்டும் மோதல்
ஆனால், சமீபத்தில் இயக்குநர் சோழதேவன் சண்டியர் என்ற பெயரில் படம் எடுக்கிறார் என்ற விளம்பரங்கள் வெளியாகின. இந்தப்படத்தை எஸ்.ஆர்.எம். பச்சமுத்துவின் வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை பெரிதாாக எடுத்துக்கொள்ளவில்லை கிருஷ்ணசாமி. முன்னதாக, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் படத்தின் பெயரை கிருஷ்ணசாமி எதிர்த்தார். ஆனால், படத்தின் பெயரை படக்குழு மாற்ற மறுத்துவிட்டது. இப்போது மீண்டும் கமல் vs கிருஷ்ணசாமி என்ற சூழல் உருவாகியுள்ளது.