பதுக்கப்பட்ட வெங்காயம் அழுகின! மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டிய நெல்லை வியாபாரிகள்!!
திருநெல்வேலி: வெங்காயத்தை கண்ணில் பார்ப்போமா என்ற நிலையில் பொதுமக்கள் தத்தளிக்கின்றனர். ஆனால் பேராசைப்பட்டு மூட்டை மூட்டையாக பதுக்கிய திருநெல்வேலி வியாபாரிகளோ தொடர் மழையால் அவை அழுகிப் போக குப்பையில் கொட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வெங்காயத்தின் விலை எட்ட முடியாத உயரத்திற்கு சென்று விட்டது. தீபாவளி பண்டிகை முடிந்த நிலையிலும் அதன் விலை குறைவதாக இல்லை. கடந்த 4ந் தேதி அதிகபட்சமாக சின்ன வெங்காயம் சில்லரை விலையில் கிலோ ரூ.80, பெரிய வெங்காயம் ரூ.60க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை சின்ன வெங்காயம் கொள்முதல் விலை கிலோ ரூ.80 ஆக அதிரடியாக உயர்ந்தது. இதனால் விற்பனை விலை ரூ.15 வரை கூடி ரூ.85க்கு விற்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து ரூ.100 வரை செல்லும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கடும் விலை உயர்வால் பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதை தவிர்க்கவும் தொடங்கினர். ஆனால் தீபாவளிக்கு வெங்காய நுகர்வு அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் ஏராளமான மூட்டைகளை இருப்பு வைத்து சில நாட்களுக்கு முன் விற்பனைக்காக கொண்டு வந்தனர். வியாபாரிகள் பேராசைப்பட்டு இருப்பு வைத்தால் பெரிய வெங்காயம் டன் கணக்கில் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தன.
மேலும் தொடர் மழை காரணமாக அவை அழுகவும் தொடங்கின. இதனால் அழுகிய நிலையில் இருந்த பெரிய வெங்காயத்தை மூட்டை, மூட்டையாக வியாபாரிகள் நெல்லை மார்க்கெட் அருகே உள்ள குளக்கரையில் கொட்டினர். இதை பார்த்த வெங்காயம் வாங்க வந்த பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். என்ன தான் விலை உயர்ந்தாலும் முக்கிய காலங்களில் விலை குறைத்தால் தான் விற்பனை செய்ய முடியும். அதிக பேராசை பட்டால் இப்படி தான் நடக்கும் என்று பொதுமக்கள் புலம்பி சென்றனர்.