பங்குதாரராக மாற்றுவதாக கூறி ஏமாற்றிய ஆன்லைன் டிவி நிறுவனம் - 5 பேர் மீது வழக்கு பதிவு
சென்னை: சென்னையில் ஆன் லைன் டிவி நிறுவனம் நடத்தி மோசடி செய்த கும்பல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
சென்னையை சேர்ந்த ஒரு ஆன் லைன் டி.வி நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கூட்டம் நடத்தியது. இதில் தங்கள் டி.வி.யில் பங்குதாரர்களாக சேர ஒருதொகையை செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தும் தொகைக்கேற்ப மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.
அதனை நம்பி புதுவை கொசப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் ரூபாய் 1,12,360, முருங்கப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் ரூபாய் 56,180, லாஸ்பேட்டையை சேர்ந்த செல்வக்குமார் ரூபாய் 56180, வில்லியனூரை சேர்ந்த செந்தில்குமார் ரூபாய் 12236, வெங்கட்டா நகரை சேர்ந்த அய்யப்பன் ரூபாய் 11236 கட்டி பங்குதாரர்களாக சேர்ந்ததாக தெரிகிறது.
ஆன் லைன் டி.வி நிறுவனம் ஒரு சில மாதங்கள் அவர்கள் கூறியபடி பங்குதாரர்களுக்கு காசோலைகள் அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த டி.வி நிறுவனம் சார்பில் வந்த காசோலைகள் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர்கள் சரியாக பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை வாங்க போலீசார் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் வெங்கடாச்சலம், இளங்கோவன், செல்வக்குமார், செந்தில்குமார், அய்யப்பன் ஆகிய 5 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து புதுவை சி.பி.சி.ஐ.டி போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து அந்த சென்னை தனியார் டி.வி. நிறுவனத்தின் சேர்மேன் பெரியாண்டவர்ராஜு, கிரிஜா மோகன், ராஜு மாரி சொர்ண பிரபா, சுஜீதா, குமுதா ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.