ஓபிஎஸ் தர்மயுத்தம் எல்லாம் எடுபடாது... அவர் செயற்கையானவர் - நாஞ்சில் சம்பத்
ஓ.பன்னீர்செல்வம் செயற்கையான மனிதர் என்பதனால் தர்மயுத்தம் எடுபடாது என்று நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் ஒரு செயற்கையான மனிதர், அவருடைய தர்மயுத்தம் எல்லாம் எடுபடாது என்று அதிமுக அம்மா அணியின் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
திருவேற்காட்டில் நடைபெற்ற அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ், இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தைக் குழு இன்றோடு கலைக்கப்படுகிறது. அணிகள் இணைப்பு தேவையில்லை என மக்கள் விரும்புகின்றனர் என்றும் அதிரடியாக அறிவித்தார். ஆனால் நிதியமைச்சர் ஜெயக்குமார், அணிகளை இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.
நாடகமாடுகின்றனர்
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுக அம்மா அணியைப் போன்று நாங்கள் நாடகமாட விரும்பவில்லை. அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தையில் நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன.
ஆக்கப்பூர்வ நடவடிக்கை
தொண்டர்கள் முழுவதும் எங்கள் பக்கம் உள்ளனர். தற்போது ஆக்கபூர்வமான யோசனை எதுவும் வரவில்லை. வரும் 14ஆம் தேதி சட்டசபை கூட உள்ளது. அந்த கூட்டத்துக்குப் பிறகு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பாஜகவில் இணைகிறார்
இதனிடையே டிடிவி தினகரனை அவரது வீட்டில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி புகழேந்தி, ஓபிஎஸ் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தார். ஓபிஎஸ் பாஜகவில் இணையப்போவதால்தான் பேச்சுவார்த்தை குழுவை கலைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
தர்மயுத்தம் எடுபடாது
பேச்சுவார்த்தை குழுக்கள் கலைக்கப்பட்டது பற்றி பேசிய நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரனுக்கு பெருகும் ஆதரவைக் கண்டு ஓபிஎஸ் அஞ்சுகிறார். ஓபிஎஸ் ஒரு செயற்கையான மனிதர் என்பதனால் அவர் நடத்தும் தர்மயுத்தம் எடுபடாது. மீண்டும் பேசுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறுவதில் உள்ள சூட்சுமம் தெரியவில்லை என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.