நிபந்தனையை நிறைவேத்தினா 24 மணி நேரத்துல பேச்சுவார்த்தை – மாஃபா பாண்டியராஜன் தடாலடி
ஓ.பிஎஸ் அணியின் கோரிக்கையை நிறைவேற்றினால் அடுத்த 24 மணி நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சசிகலாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க சிபிஐ விசாரைணை உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் 24 மணி நேரத்தில் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் பிளவு பட்டுள்ள அதிமுகவின் ஓ.பிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி கட்சி ஒற்றுமைக்காக இணைவதாக அறிவித்தன. ஆனால் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்ப்டட நிலையில் பேச்சுவார்ததை நடைபெறாமல் இரு அணியும் கட்சியை பலப்படுத்தும் பயணத்தில் இறங்கிவிட்டன.
கண்டுகொள்ளாத ஓபிஎஸ்
அதிமுகவின் புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையையடுத்த கொட்டிவாக்கத்தில் கடந்த 5ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கியது. பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்களிடம்கிடைத்த ஆதரவையடுத்து இணைப்பு பேச்சுவார்த்தையை பெரிதாக நினைக்கவில்லை ஓ.பிஎஸ் அணி என்று கருதப்படுகிறது.
செம்மலை குறுக்குசால்
இதற்கு கட்டியம் கட்டுவது போல மேட்டூர் எம்எல்ஏ செம்மலை இரு அணிகள் இணைவதை தொண்டர்கள் விரும்பவில்லை, எதிர் அணியில் உள்ளவர்கள் எங்கள் அணியில் இணைய விரும்புவதாக பீதி கிளப்பினார். இதற்கு பதிலடியாக ஈபிஎஸ் அணியை சேர்ந்த நிதியமைச்சர் ஜெயகுமார், எதிர் அணியில் இருந்து எங்கள் பக்கம் வரத் தயாராக இருக்கும் நிர்வாகிகளை தற்காத்துக் கொள்ளவே செம்மலை பிரச்னையை திசை திருப்புவதாக தெரிவித்தார்.
24 மணி நேரத்தில்
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஓபிஎஸ் அணியினர் விதித்த 2 நிபந்தனைகளை நிறைவேற்றினால் 24 மணி நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார். இரு அணிகள் இணைப்புக்காக பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு 19 நாட்கள் முடிந்த நிலையில் சசிகலாவை விலக்குவதாகக் கூறாமல், நீக்கிவிட்டதாக அறிவித்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார்.
சேலத்தில் கூட்டம்
ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை சந்திக்கும் தர்மயுத்தத்தின் 2வது கூட்டம் சேலத்தில் நாளை நடைபெறும் என்றும், இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் பாண்டியராஜன் கூறினார். இதே போன்று தேர்தல் ஆணையம் சார்பபில் டெல்லியில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மைத்ரேயன் எம்.பி பங்கேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.