எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து வந்தால் 'மாயாண்டி குடும்பத்தார்' ஒன்று கூடும் சீன் வரும்? மாஃபா பூடகம்!
தமிழக முதல்வர் எடப்பாடி அரசுக்கு ஆபத்து வந்தால் ஓ.பிஎஸ் அணி எம்எல்ஏக்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள் என்று இரு கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: முதல்வர் பழனிசாமி ஆட்சிக்கு பங்கம் வந்தால் ஓ.பன்னீர்செல்வம் அணி ஆரவுக்கரம் நீட்டுமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சரும், ஓ.பிஎஸ் அணியைச் சேர்ந்தவருமான மாஃபா பாண்டியராஜன் டுவிட்டரில் பூடகமான பதிலை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவின் அம்மா அணியில் 2 கோஷ்டிகள் உருவாகியுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில் அவரது அரசியல் வருகை, ஆளும் அதிமுக அரசுக்கு பங்கத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
அதிமுகவின் இரண்டு கோஷ்டியும் இணைகிறதா என்று 2 மாதங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று சிறையில் உள்ள பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டதன் பேரில் 2 மாத காலம் பொறுத்திருந்து பார்க்கப்போவதாக தினகரன் தெரிவித்தார். இதற்கு முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது தினகரன் கட்சியை விட்டு விலகியது விலகியது தான் என்று கூறினார்.
20 எம்எல்ஏக்கள் போர்க்கொடி
இந்நிலையில் டிடிவி தினகரனை அவரது சென்னை அடையாறு வீட்டில் தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் பழனியப்பன் உள்ளிட்ட 20 எம்எல்ஏக்கள் சந்தித்து சென்றுள்ளனர். அதிமுகவின் உள்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் முதல்வர் பழனிச்சாமி அரசுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆட்சிக்கு பங்கமா?
தமிழக சட்டப்பேரவையில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அணியில் 12 எம்எல்ஏக்கள் இருந்த போதும் 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் பழனிசாமி பிப்ரவரி 18ம் தேதி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைத்தார். இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 20 எம்எல்ஏக்கள் சென்றுள்ளதால் பழனிசாமி அரசின் பலம் குறைந்துள்ளது.
|
ஓ.பிஎஸ் ஆதரவா?
ஒரு வேளை முதல்வர் பழனிசாமிக்கு ஆட்சியமைக்க பலம் குறைந்தால் தினகரனை தொடர்ந்து எதிர்த்து வரும் ஓ.பன்னீர்செல்வம் அணி ஈபிஎஸ் அணிக்கு ஆதரவுக்கரம் நீட்டுமா என்பதே அனைவரின் பார்வையாக உள்ளது. இந்நிலையில் ஆட்சிக்கு பங்கம் வந்தால் ஓ.பிஎஸ் அணி ஈபிஎஸ் அணிக்கு ஆதரவளிக்கும் என்று நெட்டிசன் ஒருவர் தட்டிவிட்ட கருத்தை ஓ.பிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவீட் செய்துள்ளார். இதனால் ஓ.பிஎஸ் அணியும் ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை இது வெளிப்படுத்துவதாக புகைச்சல் கிளம்பியுள்ளது.
க்ளைமாக்ஸ் சீன்
எற்கனவே நாங்களெல்லாம் அண்ணன் தம்பிகள் என்று ஏற்கனவே இரண்டு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தினகரனுக்கு எதிராக 2 கோஷ்டியும் விரைவில் மாயாண்டி குடும்பத்து அண்ணன் தம்பிகளைப் போல ஒன்னு கூடும் கிளைமாக்ஸ் சீன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.