ஜெ. படத்தை நட்ட நடுவே வைத்துக் கொண்டு.. இப்படி ஒரு பதவி தேவையா ஓ.பி.எஸ்.?!
சென்னை: சென்னைத் தலைமைச் செயலகத்தில் அமெரிக்க குழுவுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வின்போது மக்களின் முதல்வர் என்று ஜெயா டிவியால் அழைக்கப்படும் மாஜி முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை எல்லோரையும் விட பிரதானமாக தெரியும்படியாக வைத்துக் கொண்டு சிரித்தபடி சும்மா உட்கார்ந்து இருந்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அங்கு பேசியது எல்லாமே அதிகாரிகள் தான்.
ஒரு பொம்மை மாதிரி உட்கார்ந்து கொண்டு இருந்தார் ஓ.பி.எஸ்.
குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட ஒருவரின் படத்தை இந்த அளவுக்கு முதல்வரும், தமிழக அரசும், அமைச்சர்களும் தொடர்ந்து பிரதானப்படுத்தி வருவது மரபுகளை மீறும் செயல், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் செயல் என்ற நியாயமான குற்றச்சாட்டை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இதற்கும் யாராவது கேஸ் போட்டால் தான் திருந்துவார்கள் போலிருக்கிறது.
நேற்று அமெரிக்கக் குழுவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டசபையில் கடந்த 8-8-2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா (இதைச் சொல்லாட்டி எப்படி!) 110-வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், திட்டங்களை சிறப்பாக அமல்படுத்த கண்காணிப்பு கொள்கை உருவாக்கமும் தேவை என்று கூறி இருந்தார். அதன்படி பள்ளிக்கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, திறமை மேம்பாட்டு திட்டங்களுக்கு உதவ அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கழகத்துடன் தமிழக அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இந்த தொழில் நுட்பக் கழகம் திட்டங்களை செயல்படுத்த உதவுவதில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆய்வு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் எம்.ஐ.டி., ஹார்வர்டு, ஏல், ஸ்டான் போர்டு உள்பட உலகின் பல்வேறு புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் இந்த நிறுவனம் கடந்த 44 ஆண்டுகளாக லாபம் நோக்கமின்றி இயங்கும் ஆய்வு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழக அரசின் உயர் கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அந்த கொள்கைத் திட்டங்களை திறமையாக நிறைவேற்ற உதவும்.
2014-15ம் ஆண்டு காலத்தில் பள்ளி கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு உள்பட 5 திட்டங்களை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும். அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு நிறைவேற்றப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த அமெரிக்க தொழில் நுட்ப கழகம் உதவும். அதோடு தமிழக அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் அந்த கழகம் வழங்கும்.
அமெரிக்கா தொழில்நுட்ப கழகத்துடனான இந்த ஒப்பந்தம் நேற்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் நடந்தது. தமிழக அரசு சார்பில் இந்த ஒப்பந்தத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கையெழுத்திட்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது நீண்ட டேபிளின் நடுவே 'சும்மா' முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார். மற்ற இரு பக்கமும், தமிழக, அமெரிக்கக் குழுவினர் அமர்ந்திருந்தனர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடதுபுறம் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தூக்கி வைத்திருந்தனர். படத்தைப் பார்க்கும்போது ஜெயலலிதா படம்தான் பளிச்சென தெரியும் வகையில் அதை வைத்திருந்தனர்.
ஜெயலலிதா படத்தை முன்னால் வைத்து சிரித்தபடியே சும்மா உட்கார்ந்து இருந்தார் பன்னீர்.
நமக்குப் பழகிப் போச்சு.. அமெரிக்காவில் இருந்து வந்த குழு தமிழக அரசைப் பற்றி, தமிழகத்தைப் பற்றி அங்கே போய் என்ன சொல்லும்.. ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டு கையெழுத்து போட்டோம்யா.. என்று கேவலப்படுத்துவார்களா இல்லையா?.
இது பன்னீர் மாதிரியானவர்களுக்கு அசிங்கமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழகத்துக்கு நிச்சயம் அசிங்கமே..