சசிகலா குடும்பம் மீது சரமாரியாக புகார்கள்.. மெளனம் கலைத்தார் ஓ.பி.எஸ்!
சசிகலாவுடன் நேரடி மோதலுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் துணிந்து விட்டதையே கடற்கரை தியானப் போராட்டம் காட்டுவதாக உள்ளது.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மெளனமாக அமர்ந்து விட்டு தற்போது சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியாக புகாரக்ளை சுமத்தியுள்ளார்.
சசிகலாவின் ஆதிக்கத்திற்கு இதுவரை பணிந்து போய்க் கொண்டிருந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஸ்டைலில் அமைதியான முறையில் ஒரு புரட்சியை மெரீனாவில் நடத்தி விட்டார்.

டிசம்பர் 5ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மறைந்ததும் அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் முதல்வராக செயல்பட்டு வந்தார். உண்மையிலேயே அனைவரும் பாராட்டும் வகையில் செயல்பட்டு வந்தார். ஆனால் சசிகலா கும்பலால் அவர் தொடர்ந்து மறைமுகமாக மிரட்டப்பட்டு வந்தார்.
அவரை பதவியிலிருந்து தூக்கி விட்டு முதல்வர் பதவியில் சசிகலாவை அமர வைக்க சசிகலா குடும்பத்தினர் தீவிரமாக முயன்று வந்தனர். படிப்படியாக காய்களை நகர்த்தி வந்தனர். ஆனால் அதை தனது பாணியில் அமைதியாக எதிர்கொண்டு வந்தார் ஓ.பன்னீர் செல்வம். இந்த நிலையில்தான் அவருக்கு மத்திய பாஜகவின் முழுமையான ஆசியும், ஆதரவும் கிடைத்தது. அது கொடுத்த தெம்பில் தொடர்ந்து சசிகலாவை முடிந்தவரை சமாளித்துப் பார்த்தார் ஓ.பன்னீர் செல்வம்.
ஆனால் சமீபத்தில் அவரிடமிருந்து முதல்வர் பதவியை சசிகலா கும்பல் பிடுங்கி விட்டது. சசிகலாவை முதல்வராக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தேர்வு செய்தது. அப்போதும் கூட புன்னகையுடன்தான் இருந்தார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் இன்று அளித்த பேட்டி அவரது மனதை உலுக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காரணம், ஜெயலலிதா இறந்தது குறித்து சசிகலா தரப்பு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. அழவில்லை,. சோகமடையவில்லை என்று கூறியிருந்தார் பி.எச்.பாண்டியன்.
இந்த நிலையில்தான் அவர் சசிகலாவுடன் நேரடி மோதலுக்குத் தயாராகி விட்டார், சில எம்.எல்.ஏக்களுடன் அவர் பேசி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தப் பின்னணியில்தான் அவர் திடீரென மெரீனா கடற்கரைக்கு வந்து ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து மெளனப் புரட்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் தியானம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சரமாரியாக புகார்களை சுமத்திப் பேசினார் ஓ.பி.எஸ்.
ஓ.பி.எஸ்ஸின் பேட்டி மூலம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக உடையும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பாஜகவின் முழுமையான ஆதரவுடன் அவர் சசிகலாவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கலாம். மீண்டும் முதல்வர் பதவியை அவர் கைப்பற்றி சசிகலா கும்பலை அடியோடு விரட்ட முயற்சிக்கலாம். அதிமுகவையும், தமிழக அரசையும் மத்திய அரசு மற்றும் பாஜகவின் துணையுடன் ஓ.பன்னீர் செல்வம் கைப்பற்றலாம். முதல்வர் ஒருவர் இதுபோல கடற்கரையில் போராட்டம் நடத்துவது மிகவும் அசாதாரணமாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications