ஜெ.மரணத்தில் நீடிக்கும் மர்மம்: நீதி விசாரணைக்கோரி ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம்!!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணைக் கோரி ஓபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுகவினர் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தக்கோரி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். சென்னை உட்பட 36 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா மறைந்து 90 நாட்களுக்கு மேலாகியும் அவரது மரணத்தில் நீடிக்கும் மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் அதிமுக இரண்டாக உடைந்த பிறகு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது.
சசிகலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்போது காபந்து முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றார். இதையடுத்து சசிகலா ஆதரவு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதால் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.
அவசர அறிக்கையாலும் பிரயோஜனம் இல்லை
இந்நிலையில் தமிழக அரசு அவசர அவசரமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அறிக்கையையும் அப்பல்லோ அறிக்கையும் பெற்று அவற்றில் இருந்த சில தகவல்களை மேற்கொள் காட்டி அறிக்கை வெளியிட்டது.
அதிகரித்துள்ள சந்தேகம்
ஆனால் அதிலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களே இருந்தன. இதனால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் அதிகரித்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பு உண்ணாவிரதம்
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர் இன்று உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 36 இடங்களில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
எழும்பூரில் ஓபிஎஸ் உண்ணாவிரதம்
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெறும் போராட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
பொதுமக்களும் பங்கேற்பு
இதேபோல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தலைமையில் ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இதில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.