காங். வேட்பாளர் தேர்வு கூட்டத்திற்கு ப.சிதம்பரம் திடீர் '"விசிட்''- ஆதரவாளர்கள் விருப்ப மனு!
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் பங்கேற்றார். அத்துடன் திடீரென அவரது ஆதரவாளர்கள் 25 பேர் திடீரென விருப்ப மனுக்களையும் கொடுத்தனர்.
சட்டசபை தேர்தல் தொடர்பான செயல்பாடுகளில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் ஒதுங்கியே இருந்து வருகிறார். அதே நேரத்தில் தம்முடைய ஆதரவாளர்கள் சிலருக்கு எப்படியும் தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதிலும் மும்முரமாக இருந்து வருகிறார்.

ஆனால் இளங்கோவன், தங்கபாலு கோஷ்டியினரோ ப.சிதம்பரம் ஆதரவாளர்களை ஒதுக்கி வைக்கும் வகையில் வியூகங்களை வகுத்து செயல்படுகின்றனர். இதனால் ப.சிதம்பரம் ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்காதோ என்ற நிலைமை உருவானது.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 27 பேர் குழுவின் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தங்கபாலு, மணிசங்கர் அய்யர், எம்.கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சி யப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், திருநாவுக்கரசர், பிரபு, குமரிஅனந்தன், சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.கோபிநாத், தேசிய செய்தித் தொடர்பாளர்கள் குஷ்பு, சி.ஆர்.கேசவன், எஸ்.சி. பிரிவுத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிதம்பரம் திடீரென கலந்து கொண்டது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அத்துடன் திடீரென வள்ளல்பெருமான், எம்.என்.கந்தசாமி உள்ளிட்ட 25க்கும் அதிகமான ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் தலா ரூ. 5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுவையும் அளித்தனர்.
ஏற்கனவே, விருப்ப மனு அளிக்காதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது என இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனால் ப.சிதம்பரம் வேறுவழியின்றி நேற்று விருப்ப மனுவை கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications