பட்ஜெட் 2018: மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதற்குள் ஆட்சியே முடிந்துவிடுமே..ப.சிதம்பரம்
மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவக் காப்பீட்டை செயல்படுத்துவதற்குள் ஆட்சியே முடிந்து விடும் என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னை: மத்திய அரசு இந்த ஆண்டு நிதியாண்டில் அறிவித்த மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதற்குள் பாஜக ஆட்சியே முடிந்துவிடும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் கடந்த 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டின் சாதக பாதகங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைகாட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், உலகளவில் கலந்து கொள்ளும் பிரதமர்களில் மோடியை பெருமையாக பார்க்கப்படுகிறார் என்பதில் ஒன்றும் அதிசயம் இல்லை.
நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக இருந்தபோதும் அவர்களும் சிறந்தவர்களாக உலக நாடுகளால் பார்க்கப்பட்டது. ஹார்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி இவர்கள் தலையெடுப்பதால் ஜாதீய தலைவர்கள் என்று அவர்களை ஒதுக்கி விடாதீர்கள். ஜாதீய அடையாளம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு கூடுகிற கூட்டம் வேலையின்மை உள்ளிட்ட காரணங்கால்தான்.

ஆட்சியே முடிந்துவிடும்
10 கோடி லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு என்று முதல் ஆண்டில் அறிவித்திருந்தால் வரவேற்கலாம். மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு அமைச்சரவை குறிப்பெழுத 3 மாதங்களாகும். அந்த குறிப்பை விவாத சுற்றுக்கு விட்டு அதை அமைச்சரவை ஏற்றுக் கொள்வதற்கு மேலும் 3 மாதங்களாகும். பிறகு அதற்கான வழிமுறைகள் , விதிமுறைகள், நெறிமுறைகள் வகுப்பதற்கு மேலும் 2 மாதங்கள் பிடிக்கும். குறிப்பாக மருத்துவ காப்பீடு திட்டத்தில் 40 சதவீத பங்கு மாநில அரசுக்கு உண்டு என்பதால் மாநில அரசுகளை கேட்பதற்கு இன்னும் காலம் பிடிக்கும். இதெல்லாம் நடப்பதற்குள் பாஜக அரசின் பதவிக்காலமே முடிந்துவிடும். எனவே இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்.

யார் எழுதினாலும் அதில் நிறை இருக்கும்
நிதி நிலை அறிக்கையை யார் எழுதினாலும் அதில் பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கும். தமிழக நிதியமைச்சர் எழுதினாலும் அதில் ஒரு பாசிட்டிவ் விஷயம் இருக்கும். எனவே நிதி நிலை அறிக்கை பயனுள்ளது என்று நிர்ணயிக்கும் அளவுகோல் அதுவல்ல. உண்மையிலேயே மக்களுக்கு இன்றைக்கு என்ன துன்பங்கள், துயரங்கள், தேவைகள் என பார்த்து அதற்கு நிவாரணம் தருவதுதான் பயனுள்ள நிதி நிலை அறிக்கையாகும். அந்த வகையில் இந்த நிதி நிலை அறிக்கை ஏமாற்றத்தை தருகிறது. ஏற்றுமதி சரிந்தால் அது வாராக்கடன்களாக மாறும்.

தலைமை பொருளாதார ஆலோசகர் கருத்து
இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தனது ஆய்வறிக்கையில் வேளாண்மை, கல்வி மற்றும் சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் உள்ள மிகப் பெரிய சவால்களை எங்களால் சந்திக்க முடியவில்லை என்று கூறுகிறார் என்றால் 4 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று சாமானியர்களும் கேட்க தோன்றும். தமிழகத்தில் நிர்வாகம் சரியில்லை என்பதுதான் உண்மை.

தமிழகத்தில் காங்கிரஸ் வலுபெற வேண்டும்
இன்று தேர்தல் நடந்தால் இன்றைய ஆளும் கட்சி நிச்சயம் தோல்வி அடையும். எனது நண்பர்கள் ரஜினியும், கமலும் தேர்தலில் வெற்றி பெறுவார்களா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தமிழகத்தை வழிநடத்தக் கூடிய நிலைக்கு காங்கிரஸ் வளர்ந்தால்தான் அது எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை என்னால் கூறமுடியும் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications