15வது சட்டசபை சபாநாயகரானார் தனபால்: முதல்வர் ஜெ., எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: தமிழகத்தின் 15வது சட்டசபை சபாநாயகராக ஏக மனதாக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் தேர்வு செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபாலுக்கு முதல்வர் ஜெயலலிதா, அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழகத்தில் 15வது சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் கைப்பற்றின. இதையடுத்து, ஜெயலலிதா தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தது.
முதல்வராக ஜெயலலிதா கடந்த மாதம் 23ம் தேதி பதவி ஏற்றார். இதை தொடர்ந்து, 15வது சட்டசபை முதல் முறையாக கடந்த மே 25ம் தேதி காலை 11 மணிக்கு கூடியது. அன்றைய தினம் தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 230 பேர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிறைவடைந்த பின்னர் செம்மலை ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அவர் கூறுகையில், சட்டசபை மீண்டும் ஜூன் 3ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு கூடும். அன்று சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வேட்புமனுவை சட்டசபை செயலாளரிடம் பெற்றுக் கொண்டு, பூர்த்தி செய்த மனுக்களை ஜூன் 2ம் தேதி (நேற்று) பகல் 12 மணிக்குள் சட்டப்பேரவை செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தார்.
இதையடுத்து, அதிமுக சார்பில் சபாநாயகர் பதவிக்கு ப.தனபாலும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமனும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் வியாழக்கிழமையன்று தாக்கல் செய்தனர்.
தனபால் - பொள்ளாச்சி ஜெயராமன்
தமிழக சட்டசபை இன்று கூடிய உடன் சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் எந்த வித போட்டியும் இன்றி தேர்வு செய்யப்படுவதாக தற்காலிக சபாநாயகர் செம்மலை அறிவித்தார்.
ஒ.பி.எஸ் - ஸ்டாலின்
சபாநாயகர் தனபாலை பேரவை இருக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் இருவரும் அமர வைத்தனர். சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதால் தற்காலிக சபாநாயகர் செம்மலை விடை பெற்றார்.
ஜெயலலிதா வாழ்த்து
சபாநாயகர் தனபாலுக்கும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களை கூறினார். தொடர்ந்து 2வது முறையாக சபாநாயகராக தேர்வானவர் தனபால் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
வாழ்த்துரை
முன்னதாக வை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சபாநாயகர் தனபாலை வாழ்த்தி பேசினர். தனபால் அவையை ஆக்கப்பூர்வமாக எடுத்துச் செல்வார் என்று கூறினார் ஓ.பன்னீர் செல்வம். மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து உரையில், சபாநாயகர் தனபாலை இருக்கையில் அமரவைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். சட்டசபை எதிர்கட்சித்தலைவராக பதவி வகிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தனபால் ஏற்புரை
இதனையடுத்து சபாநாயகர் தனது ஏற்புரையை நிகழ்த்தினார். அதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை கூறிய அவர், மகத்தில் பிறந்த மகராசிக்கு வைகாசித் திங்களில் வெற்றியை பரிசளித்து இருப்பதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.