தண்டாயுதபாணி படத்தோடு.. பழனி பஞ்சாமிர்தம் வீடு தேடி வரும்.. ரூ.250 செலுத்தி பெறலாம்.. அரசு நடவடிக்கை
பழனி: பழனி பால தண்டாயுதபாணி கோவில் பஞ்சாமிர்தம் பிரசாதம் இனிமேல் பக்தர்கள் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது என்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பக்தர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையிலான அம்மாவின் அரசு செய்து வருகின்றது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பழதி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்தம் தபால் மூலம் பக்தர்களுக்கு அனுப்பி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து அதிகளவில் பக்தர்கள் கவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வெளி மாநிலத்தவர்கள் மற்றும் திருக்கோயிலுக்கு வர இயலாத சூழ்நிலையில் உள்ள பக்தர்கள் பயனடையும் வகையில் பிரசாதத்தினை பக்தர்களின் இல்லத்திற்கே கொண்டு செல்லும் நடைமுறையினை அறிமுகப்படுத்தும் விதமாக பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் பிரசிதிபெற்ற பிரசாதமான 12கிலோ எடை கொண்ட லேமினேட்டட், டின் பஞ்சாமிர்தம், திருக்கோயில் மூலம் இயற்கையாக தயார் செய்யும் விபூதி (10 கிராம்) பிரசாதம் மற்றும் 6" X 4" அளவிலான தண்டாயுதபாணி சுவாமியின் இராஜ அலங்கார லேமினேடட் படம் ஒன்றும் அஞ்சலகத் துறை மூலம் ரூ.250/- (ரூபாய் இருநூற்று ஐம்பது மட்டும் கட்டணம் செலுத்தினால் பக்தர்களின் இல்லத்திற்கு சென்றடையும் திட்டத்தை, நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது என்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.