காட்சிக்கு வந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.. சசிகலாவுடன் சமரசம்?
சசிகலாவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என கருதப்பட்ட அதிமுகவின் பண்ருட்டி ராமச்சந்திரன் சமரச மார்க்கத்தில் இறங்கிவிட்டதாகவே தெரிகிறது.
சென்னை: சசிகலா குறித்த எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்த மூத்த அதிமுக நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் இப்போது அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் வெளியிடம் ஒன்றில் தென்பட்டார்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 29வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதாவுக்கும் அஞ்சலி
எம்ஜிஆர் நினைவிடத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, செம்மலை, தலைமை நிலைய நிர்வாகிகள் பொன்னையன், செங்கோட்டையன், சைதை துரைசாமி, உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
வாய்ஸ் கொடுக்கும் நிர்வாகிகள்
இதில் பிறரைவிட அதிகம் கவனம் ஈர்த்தவர் அஞ்சலி செலுத்த வந்த பண்ருட்டி ராமச்சந்திரன்தான். அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என்று எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி பொன்னையன் தொடங்கி சீனியர் நிர்வாகிகள் பலருமே "வாய்ஸ்" கொடுத்து வருகின்றனர்.
பண்ருட்டியார் அமைதி
ஆனால் ஜெயலலிதாவால் மிகவும் மதிக்கப்பட்ட மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் மிகவும் அமைதியாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.
சந்தேகம்
அதிமுகவில் இவ்வளவு அமளி துமளி நிலவுகிறபோதும் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அவரது அமைதி அதிமுக தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை சசிகலாவுக்கு எதிரான அணிக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறாரோ? என்கிற சந்தேகத்தையும் அதிமுக தொண்டர்கள் எழுப்பி வந்தனர்.
சிரித்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்
இந்த நிலையில் எம்ஜிஆர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிற அதிமுக தலைவர்களுடன்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் வந்தார். மேலும், பொன்னையன் உள்ளிட்டோரிடம் அவர் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். அதிமுகவில் எல்லாம் சுமுகமாக செல்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதை போல இருந்தது அவரது நடவடிக்கைகள். இது அக்கட்சி தொண்டர்களுக்கு ஆறுதலை தருமா அல்லது சசிகலாவை இவரும் எதிர்க்கவில்லையே என்ற கோபத்தை தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.