கும்பகோணம் தீ விபத்து.. 11 வருடங்கள் கடந்தும் நிவாரணம் கிடைக்காமல் பெற்றோர் ஏக்கம்
திருச்சி: கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரோடு எரிந்து உயிரிழந்த சம்பவம் 11 ஆண்டுகளை கடந்துவிட்டபோதிலும், இதுவரை, இறந்த மற்றும் காயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை.
நிவாரணம் குறித்து பரிந்துரை செய்ய கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சென்னை ஹைகோர்ட்டின் முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன், நேற்று நடைபெற்ற 11வது ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் கூருகையில், "உலகின் எந்த மூலையிலும் இதுபோல ஒரு சோக சம்பவம் நடக்க கூடாது. அரசுகள் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும்" என்றார்.

2004, ஜூலை 16ம் தேதி கிருஷ்ணா இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் இவ்விபத்து நடந்த நிலையில், பத்தாண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதிதான் வழக்கில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி (85) அவரது மனைவி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அளிக்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், இந்த தண்டனை மற்றும் நிவாரணத்தின் அளவு குறைவு என்ற அதிருப்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உள்ளது. இந்நிலையில்தான், நீதிபதி வெங்கட்ராமன், கமிஷன், நிவாரணம் தொடர்பாக விசாரித்துள்ளது. இதுவரை 65 பேரிடம் கருத்து கேட்டுள்ளது. விரைவில், நிவாரணத்தை உயர்த்தும், உத்தரவு வெளியாக வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications