குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள சினிமா பைனான்சியர் போத்ரா மிரட்டல்.. பாரிவேந்தர் பரபர புகார்
சென்னை: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சினிமா பைனான்சியர் போத்ரா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் புகார் அளித்துள்ளார்.
போத்ராவை சமீபத்தில் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில் பாரிவேந்தர் இந்த புகாரை அளித்துள்ளார்.
கந்து வட்டி கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முகுந்த்சந்த் போத்ரா, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தியாகராய நகரைச் சேர்ந்த செந்தில் கே.கணபதி, சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் போத்ரா, அவர் மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோர் தன்னிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக புகார் செய்தார். அதன்பேரில் போத்ராவை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இந்த நிலையில், பாரிவேந்தர் அளித்த புகாரில், பணம் பறிக்கும் நோக்கத்துடன் சினிமா பைனான்சியர் போத்ரா தனக்கு தொல்லை கொடுத்ததாகவும் அவரது மகன்கள், ககன், சந்தீப் ஆகியோர் ஊடகங்கள் வாயிலாக தன்னை மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
மதனிடம் பணத்தை கொடுத்துவிட்டு தான் ஏமாற்றிவிட்டதாக தகவல்களை பரப்பியதிலும் போத்ராவுக்கு தொடர்புள்ளதாக பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.