ரெட் பஸ் மூலம் புக் செய்த டிக்கெட்டுகள் செல்லும்.. ஆம்னி பஸ் சங்கம் விளக்கம்! குழப்பம் ஏன் தெரியுமா?
ரெட் பஸ் இணையதளத்தில் புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்டுக்களுக்கான பயணிகளுக்கு வழக்கம் போல் சேவை வழங்கப்படும்.
சென்னை: ரெட் பஸ் ஆப் மற்றும் வெப்சைட் மூலமாக புக் செய்த டிக்கெட்டுகள் செல்லுபடியாகும் என்று தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. புரோக்கர்கள் சங்கத்தினர் இவ்வாறு புரளி கிளப்பிவிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
ரெட் பஸ் ஆப் மற்றும் வெப்சைட் மூலம் பஸ் டிக்கெட் புக் செய்தவர்கள் வரும் 12 முதல் 17ம் தேதிவரையிலான காலகட்டத்தில் ஆம்னி பஸ்சில் ஏற்றிக்கொள்ளப்படமாட்டார்கள் என்று நேற்று மாலையில், தமிழக ஆம்னி பஸ் மற்றும் டிரைவர்கள், புரோக்கர்கள் சங்க தலைவர் பாண்டியன் அறிவித்தார்.
இதனால் பயணிகள் பீதியடைந்தனர். குறிப்பாக பொங்கலுக்கு ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகினர். ஆனால் இது தேவையற்ற வதந்தி என ரெட் பஸ் நேற்றே வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்ப தொடங்கியது.
பயணிக்கலாம்
இந்நிலையில், தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் பர்வின் இன்று கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பயணிகள் சொந்த ஊர் செல்ல, ரெட் பஸ் இணையதளத்தின் மூலம், ஆம்னி பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் அதே டிக்கெட்டில் பயணிக்கலாம்.
சங்கம் விளக்கம்
தீபாவளி பண்டிகையின் போது, ரெட் பஸ் இணையதளத்தில் தங்களை இணைத்து இருந்த, புரோக்கர் சங்கத்தினர் முறைகேடுகளை அரங்கேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, ரெட் பஸ் இணையதளத்தில் இருந்து, ஆம்னி பஸ் டிரைவர்கள், புரோக்கர்கள் சங்கத்தினர் நீக்கப்பட்டனர். இதனால், அவர்கள் ரெட் பஸ் இணையதளத்தில் புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளனர். அது தவறான தகவல்.
அச்சம் தேவையில்லை
ரெட் பஸ் இணையதளத்தில் புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்டுக்களுக்கான பயணிகளுக்கு வழக்கம் போல் சேவை வழங்கப்படும். பயணிகள் யாரும் பீதியோ, அச்சமோ அடையத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதாவது, விழாக்காலங்களில் திடீரென தோன்றும் சில பஸ் நிறுவனங்களும் ரெட் பஸ் நிறுவனத்தில் பதிவு செய்து பஸ்களை இயக்குவது வழக்கம். ஆனால், இதுபோன்ற பஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவதில்லை. ஓட்டை உடைசலாகவும், ஒழுகும் பேருந்துகளாகவும் இவை இருக்கும்.
குழப்பக்காரர்கள்
ரெட் பஸ்சுக்கு இதுபோன்ற புகார்கள் வந்ததால்தான் சுமார் 40 சிறு பஸ் நிறுவனங்களை அந்த நிறுவனம் தனது உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கிவிட்டது. இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கூறுகையில், ரெட் பஸ் இவ்வாறு 'திடீர்' பஸ் நிறுவனங்களுக்கு தடைபோட்டதால், பொங்கல் பண்டிகைக்கு அந்த பஸ் நிறுவனங்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. இந்த காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்ற தவறான தகவலை பரப்பிவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.