ஜெயலலிதாவிடம் போய்க் கேளுங்கள்.. ப.சிதம்பரம் அட்டாக்
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக ஜெயிக்குமா, ஜெயலலிதா பிரதமராவாரா, பாஜக ஜெயிக்குமா, மோடி பிரதமராவாரா என்பது குறித்து ஜெயலலிதாவிடம்தான் கேட்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தென் சென்னை காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கு தி.நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசினார்.
அவரது பேச்சிலிருந்து...
களை கட்டிய தேர்தல் திருவிழா
தேர்தல் திருவிழா, களைகட்டத் துவங்கி விட்டது. காங்கிரஸ் கட்சி, தேரை வடம் பிடிக்க தயாராகி விட்டது.
பொருளாதார வளர்ச்சி ஓஹோ..
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், முதன் முறையாக, 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. ஆனால், பா.ஜ.க, ஆட்சியில், 5.9 சதவீத வளர்ச்சிதான் இருந்தது.
முதலில் 100க்கு 28 குழந்தைகள்தான் படித்தனர்
கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வருவதற்கு முன், 100க்கு, 28 குழந்தைகள் படித்தனர். சட்டம் நிறைவேற்றிய பிறகு, 100க்கு 98 குழந்தைகள் படிக்கின்றனர்.
13 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு
நாடு முழுவதும், காமராஜர் கொண்டு வந்த மதிய உணவை விரிவுப்படுத்தியதன் மூலம், 13 கோடி மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்படுகிறது.
ரூ. 2600 கோடி கல்விக் கடன் வட்டி தள்ளுபடி
கல்விக்கடன் வட்டி 2,600 கோடி ரூபாயை, தள்ளுபடி செய்துள்ளோம். பா.ஜ.க, ஆட்சியில், இது போன்ற திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
எல்லோருக்கும் பிரதமர் பதவிக்கு ஆசை
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர். நாங்கள் அங்கம் வகிக்கும் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என்றெல்லாம் கூறுகின்றனர். எந்த கட்சியில் அங்கம் வகிக்க போகிறார்கள் என்றால் தேர்தலுக்கு பிறகு பாரதீய ஜனதா கட்சியுடன் அங்கம் வகிக்க மாட்டோம், அல்லது அங்கம் வகிக்க போகிறோம் என்பதை தி.மு.க. தலைவர் கலைஞர் தெளிவுப்படுத்த வேண்டும். இதற்கு பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.
ஜெ.விடம் கேட்க தயக்கமா இருக்கு
ஆனால் முதல்வரிடம் இந்த கேள்வியை எனக்கு கேட்க தயக்கமாக இருக்கிறது. காரணம் அவர் பதில் அளிக்க மாட்டார். அவ்வாறு பதில் அளித்தாலும் அது தவறாக தான் இருக்கும். அ.தி.மு.க. மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் பழைய வரலாறுகளை பார்க்கும் போது, தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணிக்கு போக வாய்ப்பு உள்ளது. இதற்கான கேள்வியை முதல்வரிடம் ஊடகங்கள் தான் கேட்க வேண்டும்.
தமிழகத்தைப் பற்றித்தான் எனக்குக் கவலை
தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லை என்ற கவலை இல்லை. தமிழகத்தைப் பற்றியே கவலைப்படுகிறேன்.
8 தலைமுறை கட்சி இது
8 தலைமுறைகளுக்கு பணியாற்றியுள்ள அரசியல் கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சியில்லை என்று பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள் என்றார் ப.சிதம்பரம்.