நாயா நீ? பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு சாட்டையடி!
சென்னை: நம் ஊரில்தான் பொது சுவரில் சிறுநீரில் கோலம் போடுவார்கள் பொதுமக்கள்.
அம்மா உணவகம் இருக்கும் அளவிற்கு கூட இங்கே பொது கழிப்பிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிறுகிராமங்களில் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் கூட பொது சுவற்றை நாறடித்து முகம் சுளிக்கச் செய்பவர்கள்தான் இங்கே அதிகம் உள்ளனர்.
இதுபோன்று பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களையும், சிறுநீர் கழிப்பவர்களைத் தடுப்பவதற்காக ஸ்வாமி படங்களை வரைந்து வைத்திருப்பார்கள்.
இல்லையெனில் அறுந்த செருப்பு, துடைப்பம் என கட்டி தொங்க விட்டிருப்பார்கள் அதையும் பார்த்து சில ஜென்மங்கள் திருந்தாமல் சிறுநீர் கழித்துச் செல்வார்கள்.
நாயா நீ?
அபராதம் விதித்தாகி விட்டது. என்னென்னவோ செய்தாகிவிட்டது. ஆனாலும் நம்மக்கள் திருந்தியபாடில்லை. சென்னையில் முக்கியமான தெரு ஒன்றில் நாய் காலை தூக்கி சிறுநீர் கழிப்பது போல படம் ஒன்றினை வரைந்து பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் நீ நாயா? என்கிற ரீதியில் வாசகமும் எழுதி வைத்துள்ளனர்.
ஏனெனில் நாய்கள்தான் கண்ட இடத்தில் சிறுநீர் கழிக்கும் என்கிற தொனியில் கேட்டுள்ளனர். இந்த படம் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.
வித்தியாசமான தண்டனை
சென்னையில் இப்படி என்றால் மும்பையில் கிளீன் இந்தியா என்ற தனியார் அமைப்பு ஒன்று பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது வேகமான நீரை பாய்ச்சி அவர்களை திக்குமுக்காட செய்து வருகின்றனர்.
இதற்கெனவே காவல்துறையினர் வைத்திருப்பது போன்ற தண்ணீர் நிரப்பிய லாரி ஒன்றை இந்த அமைப்பு வாங்கியுள்ளது. இந்த லாரி, மும்பையின் முக்கிய இடங்களை வலம் வருகிறது.
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களை கண்டால் போதும் உடனடியாக அவர்கள் மீது வேகமாக நீரை பாய்ச்சி அவர்களை நிலைதடுமாற செய்துவருகிறது. இதனால் மும்பையில் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களின் பாடு பெரும்பாடாகி வருகிறது.
சிறுநீர் கழிக்க என்று கட்டணக்கழிவறைகள் மற்றும் இலவச கழிவறைகள் பலவற்றை அரசு அமைத்து கொடுத்திருந்தபோது, அவற்றை பயன்படுத்தாமல் விலங்குகள் போன்ற சாலையில் உள்ள சுவரோரங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்கவே நாங்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்கின்றனர் இந்த அமைப்பினர்.
இந்த நடவடிக்கை சட்டப்படி சரியா அல்லது தவறா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் தொடர்ந்து இந்த நடவடிக்கையை செய்தால் கண்டிப்பாக பொதுமக்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
A clean streets campaign in Chennai that takes the piss out of public pee-rs pic.twitter.com/6S02w5ds5H
— joeanna r fernandes (@joeannarf) December 3, 2014
பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நடவடிக்கையை வீடியோ எடுத்து யூடியூப் இணையதளத்திலும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவும் இப்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்தியாவில் எத்தனை முக்கியமான சாலைகளில் சிறுநீர் கழிக்க போதிய வசதியும், கழிவறைகளும் உள்ளன?. இதற்கு அரசின் பதில் என்ன?