வீடுகளை சூழ்ந்த வெள்ளம்... மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் மக்கள் - அரசு மீது கடும் கோபம்
வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அச்சமடைந்த முடிச்சூர் பகுதி மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினர்.
Recommended Video

சென்னை: முடிச்சூர் அருகே வரதராஜபுரத்தில் வசிக்கும் 70 சதவிகித மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். 2 நாள் மழைக்கே வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு தஞ்சமடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று 3வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. ஒரு நாள் மழைக்கே புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
விட்டு விட்டு பெய்து வரும் பலத்த மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையின் இருபுறத்தையும் தொட்டவாறு தண்ணீர் கரைப்புரண்டு ஓடுகிறது.

வீடுகளை சுற்றி வெள்ள நீர்
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அடையாறு ஆற்றை ஒட்டி கரையோரத்தில் உள்ள முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர், சி.டி.ஓ. காலனி பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழை நீர் கலந்து புகுந்துள்ளால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வெளியேறிய மக்கள்
முடிச்சூர், வரதராஜபுரம், சமத்துவ பெரியார் நகர், அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள சுமார் 70 சதவிகிதம் மக்கள் வீடுகளை காலி செய்து உறவினர் வீடுகளுக்கு மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு செல்கிறார்கள். அதிக வெள்ளம் சூழ்ந்த வரதராஜபுரத்தில் படகுகளின் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.

ஆறாக மாறிய சாலைகள்
சேலையூரை அடுத்த திருவஞ்சேரி மப்பேடு, ராஜகீழ்பாக்கம், திருமலை நகர், சிட்லப்பாக்கம், பொழிச்சலூர், அனகாப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் தெருக்களில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.

அச்சத்தில் மக்கள்
கடந்த 2015ஆம் ஆண்டு பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது முடிச்சூர், பெருங்களத்தூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதே போல மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து இருப்பதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர்
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தாழ்வான இடங்களான ஜோதிநகர், சத்யமூர்த்தி நகர், முருகப்பா நகர், ஜெய்ஹிந்த் நகரில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் நிற்கிறது. ஜோதி நகரில் உள்ள பிரதான மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் மழை வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது.

குளமாக மாறிய அம்பத்தூர்
அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. இதையடுத்து பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. குறைவான ஊழியர்களே சில தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

கொரட்டூர் ஏரி உடைப்பு
அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற வழி தெரியாத சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து கழிவு நீரை வெளியேற்றினர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை எதுமில்லை
வடகிழக்கு பருவமழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று அமைச்சர்கள் கூறி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையுமே எடுக்காத காரணத்தால் மீண்டும் வெள்ளத்தில் சிக்கி தவிக்க வேண்டியுள்ளதாக கூறி அரசை குற்றம் சாட்டி வருகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.












Click it and Unblock the Notifications